கொரோனா 3வது அலை எப்படி இருக்கும்.... குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது - எய்ம்ஸ் இயக்குனர் சொல்வது என்ன?
கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்
சென்னை: கொரோனா பெருந்தொற்றின் பரவல் இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றும் 2வது அலையைப் போன்று 3வது அலை மோசமானதாக இருக்காது என்றும்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்றும் ரந்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா பெருந்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளைத் தன் பிடிக்குள் வைத்துள்ளது. முதல் அலையில் இந்தியாவில் அதிக பாதிப்பு இல்லை என்றாலும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக உயிரிழப்பு அதிகம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டன.

கொரோனா பற்றிய அச்சம் நீங்கியதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்தது. இரண்டாவது அலையில் இந்தியாவில் கொத்து கொத்தாக கொரோனா பரவியது. பல லட்சம் பேர் தினசரியும் பாதிக்கப்பட்டனர். தினசரி உயிரிழப்பு 7 ஆயிரத்திற்கும் மேல் தாண்டியது. இடுகாடுகளில் சடலங்கள் எரிந்து கொண்டே இருந்தன. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் தற்போது ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது கொரோனா.
கொரோனா மூன்றாவது அலை விரைவில் வீசக்கூடும் என்றும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நாம் கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும், மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது, அது 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவைத் தாக்கும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா கடந்த மாதம் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
கொரோனா 3 வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவாா்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா், குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய ரந்தீப் குலேரியா
ஏற்கெனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கொரோனா தொற்று தாக்கியதாக செரோ ஆய்வு முடிவு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது என்று அவர் கூறியுள்ளது சற்றே ஆறுதலைத் தருகிறது.
கொரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது. இப்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடா்ந்து கூறுகிறோம் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கோவிஷீல்ட், கோவக்ஷின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக், ஜான்சன் அன் ஜான்சன் தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்தியாவில் தினசரியும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கூட்டமான இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், இரட்டை மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்டா கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், இருமல் வர வாய்ப்பு இல்லை என்று அதே நேரத்தில் மூட்டுக்களில் வலி, தலை வலி, முதுகுவலி, உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா டெல்டா வைரஸ் அதிக வீரிய கொண்டதாக இருக்கும் கூறியுள்ள மருத்துவர்கள் இது நேரடியாக நுரையீரலை பாதித்து நிமோனியாவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். சாதாரண பரிசோதனைகள் மூலம் கொரோனா நெகடிவ் என்றுதான் தெரியவரும் என்றும் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை மூலம் மட்டுமே நுரையீரல் பாதிப்பை கண்டு பிடிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேகமாக பரவும் வைரஸ் நிமோனியாவல் ஏற்படும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் கடுமையான மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மக்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால், தடுப்பூசித் திட்டத்தின் வேகம் அதிகரித்தால் மூன்றாவது அலையைத் தள்ளிப் போடலாம் என்றும் ஒருவேளை மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதன் தாக்கம் குறைவானதாக இருக்கலாம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் 130 கோடிக்கு மேற்பட்ட மக்களில் 108 கோடி பேருக்கு தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இது அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலை இப்போதுதான் ஏற்படும் என்று ஏதும் குறிப்பிட்ட காலகட்டத்தை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், வெகுவிரைவில் கொரோனா அன்றாட பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகியனவற்றைப் பின்பற்றினால், தடுப்பூசி செலுத்துவதிலும் கவனம் செலுத்தினால் நிச்சயமாக நாம் மூன்றாவது அலையைத் தள்ளிப்போட முடியும் என்றும் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். ஒருவேளை மூன்றாவது அலை வந்தாலும் கூட முதல் மற்றும் இரண்டாவது அலையை ஒப்பிடுகளையில் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications