‘சபாஷ்’ போட வைத்த 'தமிழ்நாடு' கோலம் உருவானது எப்படி? கனிமொழி சொன்ன ‘செம’ பின்னணி!
சென்னை : திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், 'தமிழ்நாடு கோலம்' எப்படி உருவானது என்பது பற்றி விளக்கியுள்ளார் கனிமொழி. தனது மகனின் நண்பர் உருவாக்கிய கோலம் டிசைன் அது எனத் தெரிவித்துள்ளார் கனிமொழி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது எனப் பேசி இருந்தார்.
அதற்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர். இந்நிலையில், தமிழ்நாடு என்ற சொல் இடம்பெறும் வகையில் ஒரு கோலத்தை, தனது பொங்கல் வாழ்த்து அட்டையில் இடம்பெறச் செய்தார் கனிமொழி.

கனிமொழி கோலம்
திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கருணாநிதி, தனது நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து, வாழ்த்து அட்டைகளை அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வித்தியாசமாக அதே நேரம் சிம்பிளாக ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பியுள்ளார். பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லி கனிமொழி அனுப்பியுள்ள வாழ்த்து அட்டையில் இடம்பெற்றுள்ள 'கோலம்' அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கோலம் மூலம் எதிர்ப்பு
கனிமொழியின் வாழ்த்து அட்டையில், கம்பிக் கோலம் போன்ற வடிவமைப்பு, 'தமிழ்நாடு' என்ற வார்த்தையாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. நெளிந்து நெளிந்து தமிழ்நாடு என்ற சொற்கள் கோலம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவியின் 'தமிழ்நாடு' பற்றிய கருத்துக்கு எதிரான போராட்ட வடிவமாக கனிமொழி முன்னெடுத்துள்ள இந்த'தமிழ்நாடு' கோலம் திமுகவினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கவிஞர் தாமரை பதிவு
இந்நிலையில், பாடலாசிரியர் தாமரை, கனிமொழியின் வாழ்த்து அட்டையில் இடம்பெற்றிருந்த இந்தக் கோலப் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, "இந்தக் கோலத்தை வடிவமைத்தது யார் என்று அவருக்கும் தெரியவில்லை. யார் என்று தெரிந்தால் நேரடியாக அவருக்கே நன்றி சொல்லிவிட்டு, எத்தனை புள்ளி எத்தனை வரிசை போன்ற விவரங்களைக் கேட்டறிந்து வெளியிட ஏதுவாக இருக்கும். கோல விற்பன்னர்களும் உதவலாம். இந்தப் பொங்கல் திருநாளில் நம் வீட்டு வாசல்களில் இந்தக் கோலம் கொலுவீற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

அண்ணாவின் புள்ளி.. கலைஞரின் வரிசை
இதையடுத்து, ஊடகம் ஒன்றின் சார்பில், கனிமொழியிடம் எத்தனை புள்ளி எத்தனை வரிசை எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கனிமொழி, "அண்ணாவின் புள்ளி.. கலைஞரின் வரிசை" என நயமாகப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து, "ஒவ்வொரு பொங்கலுக்கும் வாழ்த்து அனுப்புவது பற்றி சிந்திப்பேன். இந்த முறை எனது மகனின் நண்பர் கோலம் டிசைன் செய்வது பற்றி அறிந்து, அவரிடம், "தமிழ்நாடு" என்ற வார்த்தையை வைத்து கோலம் வடிவமைத்துத் தர முடியுமா எனக் கேட்டேன். அவர் வடிவமைத்த கோலம் தான் இது" எனத் தெரிவித்துள்ளார் கனிமொழி.

சென்னை சங்கமம்
வர்ஷா என்ற கலைஞர் இந்த கோல ஓவியத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஓவியம், 'சென்னை சங்கமம்' நிகழ்விலும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 'சென்னை சங்கமம்' என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கனிமொழியே ஒருங்கிணைத்து வருகிறார். முந்தைய திமுக ஆட்சியிலும், சென்னை சங்கமம் நிகழ்வை கனிமொழி முன்னின்று செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications