பிசிஆர் முறையிலான கொரோனா சோதனை.. செம ஈஸி.. மக்களே தயக்கம் வேண்டாம்.. கிரவுண்ட் ரிப்போர்ட்!
சென்னை: வீடுகளுக்கு வந்து கொரோனா வைரஸ் சோதனை செய்தால் தயங்காதீர்கள். அது மிகவும் சுலபமான சோதனையாகும். ரூ 6000 மதிப்பிலான கொரோனா சோதனையை அரசு இலவசமாக செய்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று மட்டும் ஒரே நாளில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 2500- ஐ தாண்டியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனால் இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வீடுகள் தோறும் உடலின் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு பின்னர் கொரோனா சோதனையும் செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.
அது போல் சுகாதார துறை அதிகாரிகள் வந்து கொரோனா சோதனை செய்ய வந்ததாக கூறினால் அச்சப்பட வேண்டாம். கொரோனா சோதனை எப்படி இருக்கும் என்பது குறித்து களஆய்வு செய்ததில் அது எத்தனை சுலபம் என்பது தெரியவந்தது. வேலையின்மை மற்றும் பணப் பற்றாக்குறையால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள்.
மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
சொந்த ஊர்
அவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களை சோதனை சாவடிகள் மூலம் பிடித்து கொரோனா சோதனை மேற்கொள்ள போலீஸார் அனுப்பிவிடுகிறார்கள். அது போல் சொந்த ஊர்களுக்கு யார் வெளியூரில் இருந்து வந்தாலும் மாவட்ட நிர்வாகத்திடமோ கிராம நிர்வாக அலுவலரிடமோ தகவல் அளிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யார் வீட்டுக்கு
இதையடுத்து சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களின் விவரத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் மக்கள் புகார் கொடுக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு வந்து ஆய்வு நடத்துகிறார்கள். பின்னர் நாம் யார் வீட்டுக்கு வந்திருக்கிறோமோ அவர்களை எச்சரிக்கிறார்கள்.
தனிமை
இதையடுத்து ஊரில் இருந்து வந்தவர்களை கொரோனா சோதனைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா பரிசோதனை முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். செல்லும்போது இரு செட் துணிகள், பேஸ்ட, பிரஸ் ஆகியவற்றை கொண்டு செல்லும்படி கூறுகிறார். ஏனெனில் கொரோனா சோதனை ரிசல்ட் வரும் வரை அரசு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் (Quarantine centres) தங்க வேண்டும்.
ஆம்புலன்ஸ்
ஒருவேளை நாம் செல்லாவிட்டால் நம் வீடு தேடி ஆம்புலன்ஸும் போலீஸ் வாகனமும் வந்து நம்மை அழைத்து சென்றுவிடுவார்கள். சரி நாமே அவர்கள் சொல்லும் இடத்திற்கு கொரோனா சோதனைக்கு செல்லும் போது அங்குள்ள மருத்துவர் நாம் எங்கிருந்து வந்துள்ளோம் என்றும் எத்தனை நாட்கள் ஆச்சு என்றும் கேட்கிறார்.
மூச்சுப் பிரச்சினை
பின்னர் ஒரு படிவத்தை அவர்களாகவே பூர்த்தி செய்கிறார்கள். அதில் பெயர், வயது, ஊர்பெயர், போன் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்துவிட்டு காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுப் பிரச்சினை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கின்றனவா என கேட்கிறார்கள். பின்னர் ரத்த அழுத்தம், சர்க்கை நோய் உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்தும் கேட்கிறார்கள்.
கொரோனா
இதையடுத்து ஒரு நீண்ட பிளாஸ்டிக் குடுவையை தருகிறார்கள். பார்ப்பதற்கு ரத்தம் சேகரிக்கும் கண்ணாடி குவளை போல் உள்ளது. அதில் நமது பெயரும் கொரோனா சோதனையின் வரிசை எண்ணும் தேதியும் குறிப்பிடப்படுகிறது. அதில் பிங்க் நிற திரவம் உள்ளது. பின்னர் கொரோனா சோதனை மேற்கொள்வோர் நம்மிடம் இரு குச்சிகளை கொடுக்கிறார்.
பின்புறம்
அதில் இரு முனைகளிலும் பஞ்சு இருக்கிறது. ஒன்று மூக்கில் விடுவதற்கு , இன்னொன்று தொண்டை பகுதியில் விடுவதற்கு. மெல்லியதாக உள்ளதை மூக்கினுள் விடுகிறார்கள், தலையை தூக்கியபடி காட்ட வேண்டும். பின்னர் அந்த குச்சியை குடுவையினுள் அவர்களே போட்டுவிடுகிறார்கள். அந்த குப்பிக்கேற்ப குச்சியின் பின்புறத்தை கட் செய்து விடுகிறார்கள்.
தொண்டை குழியில்
இதைத் தொடர்ந்து வாயினுள் தொண்டை குழியில் இன்னொன்ரு குச்சியை விட்டு துழவுகிறார்கள். பின்னர் அந்த குச்சியையும் அதே குடுவையில் போட்டு இறுக்கமாக மூடியால் மூடி அதன் வாய் பகுதியில் மூடி அவிழாதவண்ணம் டேப் சுற்ற கூறுகிறார்கள். இதையடுத்து அதன் முடிவுகள் வருவதற்கு ஓரு நாள் அல்லது இரு நாட்கள் ஆகிறது.
சளி மாதிரி
சென்னையை தவிர மற்ற இடங்களில் எடுக்கப்படும் கொரோனா சோதனை மாதிரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு செல்கிறது. அங்கிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறது. உதாரணமாக கொரோனா சோதனை எடுத்தவர் சென்னையிலிருந்து ஆரணி சென்றவர் எனில் அவரது சளி மாதிரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து சென்னை கொரோனா பரிசோதனை கூடத்திற்கு செல்கிறது.
சோதனை
இதையடுத்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்னும் முடிவுகள் வருகின்றன. ஒரு வேளை பாசிட்டிவாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரே வீடு தேடி வந்து அறிவிப்பார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஒருவேளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அங்கும் எடுத்துக் கொள்ளலாம். அங்கு எந்த கட்டணமும் இலவசம் இல்லை. கொரோனா பரிசோதனைக்கே ரூ 6000 வசூலிக்கப்படுகிறது. இதுதான் கொரோனா பரிசோதனை நடைமுறைகள். அப்பறம் என்ன கொரோனா சோதனை செய்வோம்.. கொடிய அரக்கனை ஒழிப்போம்!