தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? கடைசி நிமிடத்தில் ரயில் மிஸ் பண்ணுனா, இப்படிதான் காசை திரும்ப பெறணும்
சென்னை: தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்ப அனைவரும் தயாராகிவிட்ட நிலையில், எதிர்பாராத காரணங்களால் ரயிலில் செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த தீபாவளி இதோ வந்துவிட்டது. வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள் மட்டுமின்றி மாற்று மதத்தினரும் கூட கொண்டாடும் பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. மேலும் விற்பனையும் கூட இந்த காலகட்டத்தில் தான் கலைக் கட்டும்.

தீபாவளி
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகத் தீபாவளி இருக்கிறது. தீபாவளியை அனைவரும் தங்கள் குடும்பங்கள் உடன் கொண்டாட வேண்டும் என்றே நினைப்பார்கள். அதிலும் இந்தாண்டு தீபாவளி திங்கள்கிழமை வரும் நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். வார விடுமுறையுடன் சேர்த்து தீபாவளியும் சொந்த ஊர்களில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

ரயில்
பொதுவாக இதுபோன்ற விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை ராக்கெட் அளவுக்கு உயரும். இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதாக ஒவ்வொரு முறை சொன்னாலும், அதே தான் மீண்டும் மீண்டும் நடக்கும். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ரயில்கள் பக்கமே திரும்புகின்றனர். குறைந்த விலையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால் ரயிலையே பலரும் விரும்புகின்றனர்.

கேன்சல்
சில குறிப்பிட்ட காரணங்களால் வெறு வழியின்றி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால், அதற்கான பணத்தை எப்படித் திரும்பப் பெற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உறுதி செய்யப்பட்ட டிக்கெட் 48 மணி நேரத்திற்கு முன் கேன்சல் செய்தால் ஏசி முதல் வகுப்புக்கு ரூ.240, ஏசி 2 வகுப்பிற்கு ரூ.200, ரூ. ஏசி 3 டயர்/ஏசி சீட்டிங்கிற்கு ரூ.180, ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.120, இரண்டாம் வகுப்புக்கு ரூ.60 பிடிக்கப்படும்.

எவ்வளவு
அதேநேரம் ரயில் புறப்படுவதற்கு 48 முதல் 12 மணி நேரத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் தொகையில் 25% பிடிக்கப்படும். ரயில் கிளம்ப 12 முதல் 4 மணி நேரத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கேன்சல் செய்தால் 50% பிடிக்கப்படும். அதேநேரம் RACஇல் டிக்கெட் இருந்தால் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை கேன்சல் செய்யலாம். இதில் அனைத்து பிரிவுக்கும் 60 ரூபாய் ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். டிக்கெட் வெய்டிங்கில் இருந்தாலும் கேன்சல் செய்தால் 60 ரூபாய் ரத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

கடைசி வாய்ப்பு
இது பெரும்பாலான நபர்களுக்குத் தெரியவே செய்யும். ஆனால், சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் டிக்கெட்டை கேன்செல் செய்ய முடியாது என்றே பலரும் கூறுவார்கள். ஆனால், சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு கேன்செல் செய்தாலும், ரயிலை தவறவிட்டாலும் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா. ஆனால், அதற்கு சில குறிப்பிட்ட விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும். அதைச் செய்தால் எளிதாகப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

டிடிஆர் முறை
சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை கேன்சல் செய்பவர்கள் டிக்கெட் டெபாசிட் ரெசிப்ட் எனப்படும் டிடிஆரை பைல் செய்ய வேண்டும். இதை ஐஆர்சிடிசி இணையதளம் மூலமே செய்து விடலாம். உறுதியான டிக்கெட்களை 4 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யப்படாவிட்டாலோ அல்லது TDR ஆன்லைனில் தாக்கல் செய்யாவிட்டாலோ, பணம் திரும்பக் கிடைக்காது. RACக்கும் இது பொருந்தும். ஆனால், ரயில் புறப்பட 30 நிமிடங்களுக்கு முன் கேன்சல் செய்யலாம்.

எப்படி
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. TDR எப்படி பைல் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். IRCTC தளத்தில் மெனுவில் சர்வீஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் historyஇல் my transitionsக்கு செல்ல வேண்டும். பின்னர் பாஸ்வேர்ட் கொடுத்துச் சரி பார்த்து TDRஐ பைல் செய்து பணத்தைத் திரும்பப் பெறலாம்.. இப்படிச் செய்தால் 5 நாட்களில் கட்டணம் திருப்பித் தரப்படும். கவுண்டரில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் ஆன்லைனில் டிடிஆர் தாக்கல் செய்யலாம். இருப்பினும் தொகையை அவர்கள் கவுண்டரில் தான் பெற வேண்டும்.

தக்கல் டிக்கெட்
ரயில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டாலோ அல்லது 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தாலோ இப்படி TDR முறையில் தொகையைத் திரும்பப் பெறலாம். அதேபோல தக்கல் டிக்கெட்களை ரத்து செய்தாலும் பணம் திரும்ப எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications