பிளஸ் 2 தேர்வு ரத்து - மதிப்பெண்கள் வழங்குவது எப்படி? உயர்கல்வி சேர்க்கை எப்படி? தமிழக அரசு விளக்கம்!
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை எப்படி நடைபெறும்? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று பல்வேறு கருத்துக்கள் உலவி வந்த நிலையில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழக அரசு விளக்கம்
பல்வேறு தரப்பினரும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மதிப்பெண்கள் எப்படி?
தற்போது பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஏனென்றால் பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பெண் என்பது மாணவர்களின் உயர் கல்வியையும், ஏன் அவர்களின் வாழ்க்கையையும் நிர்ணயம் செய்யக் கூடியதாகும். இந்த கேள்விக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
குழு அமைக்கப்படும்
இது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், ' பிளஸ் 2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னைபல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுஅமைக்கப்படும். இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
உயர்கல்வி நிறுவன சேர்க்கை எப்படி?
இந்த குழுவினர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்' என்று தமிழக அரசு கூறியுள்ளது.