வீட்டை இழந்த விஜயா.. ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்த பெண்.. அம்பத்தூரையே அதிர வைத்த லட்சுமி
சென்னை: சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பாண்டுரங்கபுரம் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார்.அந்த வீட்டை வாங்க விரும்புவதாக செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கந்தன், லட்சுமி தம்பதி கூறியுள்ளனர்.இந்நிலையில் விஜயாவை ஏமாற்றி ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக கந்தன், லட்சுமி தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் வீடு, நிலம் விற்பவர்கள், வாங்குவோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் இன்றைக்கு நம்பவே முடியாத அளவிற்கு புதிய புதிய நூதன மோசடிகளை இருதரப்புமே மேற்கொள்கிறது. இறந்தவர்கள் பெயரில் ஆதார் அட்டையை உருவாக்கி, அதை வைத்து நிலத்தை அபகரிப்பது, இறப்பு சான்றிதழ் தயாரித்து மோசடி செய்வது, வாரிசு சான்றிதழ் வாங்கி நிலத்தை மோசடி செய்வது அதிகமாக நடக்கிறது. இப்படி கடந்த சில வருடங்களாக பலர் நிலம், வீடுகளை ஏமாந்துள்ளனர். சிலர் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளையும், வீட்டு மனைகளையும் வாங்கி ஏமாந்துள்ளனர். அதேபோல் சிலர் காசோலைகள் கொடுத்தும் மோசடி செய்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அம்பத்தூரில் நடந்த மோசடி குறித்து பார்ப்போம்.

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பாண்டுரங்கபுரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவருடைய மனைவி விஜயா (வயது 53). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விஜயா சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்திருக்கிறாராம். இவரிடம் செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம் ராஜாஜி தெருவை சேர்ந்த கந்தன் (47), அவரது மனைவி லட்சுமி (43) ஆகியோர் தொடர்பு கொண்டுள்ளனர். விஜயாவின் வீடு மற்றும் நிலத்தை ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு வாங்கி கொள்வதாக கந்தன் மற்றும் லட்சுமி தம்பதி கூறினார்களாம்.
மேலும் வங்கியில் கடன் பெற்று அந்த பணத்தை விஜயாவின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் கூறியிருக்கிறார்கள். விஜயா தனக்கு வங்கி கணக்கு இல்லை என்று கூறியதால் கந்தன், கொளத்தூரில் உள்ள தனியார் வங்கியில் விஜயா பெயருக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுத்திருக்கிறார்கள்.. மேலும் விஜயாவின் கையொப்பமிட்ட 5 காசோலைகளையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் நல்ல பிள்ளை போல், பல்வேறு தவணைகளாக கந்தன், மொத்தம் ரூ.81 லட்சத்தை விஜயாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். மீதி பணத்தை வங்கி கடன் வந்தவுடன் தருவதாக கூறி நம்பிக்கை வார்த்தை கூறி விஜயாவின் வீட்டை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் விஜயா வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் அவரது காசோலை மூலமாக கந்தன் தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்களாம்.
மீதி பணத்தை கொடுக்காமல், ஏற்கனவே கொடுத்த பணத்தையும் திரும்ப எடுத்துக்கொண்டதுடன், வீட்டையும் ஏமாற்றி கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்டதால் விஜயா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கந்தன் மற்றும் லட்சுமி தம்பதி மீது ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் விஜயா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கந்தன், அவரது மனைவி லட்சுமி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.












Click it and Unblock the Notifications