அந்த ரெஜிஸ்டர்.. அதுதான் எடப்பாடிக்கு சிக்கல்.. யார் அவங்கலாம்? - பாயிண்டுகளை அடுக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : பொதுக்குழுவில் நடந்த முறைகேடுகள், விதிமீறல்கள் தொடர்பாக பல விஷயங்கள் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக இருப்பதாக பாயிண்டுகளை அடுக்குகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் முறையாக வருகைப் பதிவேட்டை பராமரிக்காதது ஈபிஎஸ் தரப்புக்கு சிக்கலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத 600 பேரை ஈபிஎஸ் தரப்பினர் இறக்கியதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டுவதும் இந்த விஷயத்தில் எடப்பாடி தரப்புக்கு தலைவலியாக மாறியுள்ளது.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் உச்சமடைந்துள்ள ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு வர திட்டமிட்டு வருகிறார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடி பதில்
அதிமுகவில் நிகழ்ந்து வரும் தற்போதைய குழப்பமான சூழல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பெரும்பாலான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு
மேலும், பொதுக்குழு கூட்டப்படுவதில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் எனக்கு ஆதரவாக உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை அங்கீகரிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மேலும், 2,441 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பீதி?
ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரே இல்லை என தடாலடியாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓபிஎஸ்ஸின் மனு குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பாத நிலையிலும் கூட அவசர அவசரமாக பதில் மனுவை அனுப்பியுள்ளதும், பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ததும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பீதியில் இருப்பதையே காட்டுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓபிஎஸ் வைக்கும் குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல், 23 தீர்மானங்களை நிராகரித்து, ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் ஏற்கனவே தொடரப்பட்டுள்ளது. இதனால், தனக்கு சிக்கல் உருவாகியிருப்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

அவமதிப்பு வழக்கு
ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதில், பொதுக்குழுவில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளோடு ஓபிஎஸ் தரப்பு சமர்ப்பிக்க இருப்பதாகவும், இதன்மூலம் எடப்பாடியின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் சூளுரைக்கிறார்கள்.

வருகைப்பதிவேடு முறையாக இல்லை
மேலும், தனக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அதிகமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும் கூட, ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் முறையாக வருகைப் பதிவேட்டை பராமரிக்காததும் ஈபிஎஸ்ஸுக்கு சிக்கலாக மாறியுள்ளது. மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத 600 பேரை ஈபிஎஸ் தரப்பினர் இறக்கியதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டுவதும் இந்த விஷயத்தில் சிக்கலாகியுள்ளது.

தன்னிச்சையாக
மேலும், அவைத்தலைவர் தேர்வு, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு ஆகியவையும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸை முழுமையாக புறக்கணித்து அறிவிக்கப்பட்டிருப்பதும், பொதுக்குழுவில் தொண்டர்களால் ஓபிஎஸ் அச்சுறுத்தப்பட்டதும் அவருக்கு சாதகமாக இந்த விவகாரத்தை திருப்பும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications