சீனாவுக்கு எதிரான சிக்னல்.. இந்திய கடற்படையுடன் இணையும் அமெரிக்க கடற்படை.. அந்தமானில் மாஸ் திட்டம்!
சென்னை: கிழக்கு லடாக்கில் மோதலுக்கு பிறகு சீனாவிற்கு எச்சரிக்கை செய்யும் வகையில் இந்தியாவின் போர்க்கப்பல்கள் அமெரிக்காவின் போர்க்கப்பலுடன் இணைந்து அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
Recommended Video
லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது. இந்தியா சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் படைகளை குவித்தன.
தற்போது இரு நாடுகளும் படைகளை குவித்ததை வாபஸ் பெற்ற போதும், பிரச்சனை நீர் பூத்த நெருப்பாக லடாக்கில் இன்னமும் இருக்கிறது. தற்காலிகமாகவே படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஏன் சீனாவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவை எச்சரிக்கும் விதமாக இந்தியா மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள மலாக்கா நீரிணை வழியாகவே சீன எண்ணை இறக்குமதிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த போர் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தென்சீன கடலில் ரோந்து
அமெரிக்காவின் நிமிட்ஸ் போர்க்கப்பல் மற்றும் ரொனால்டு நேகன் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் சுமார் 100,000 டன் எடையை ஏற்றி செல்லும் திறன் படைத்தவை. இவற்றில் 80-90 வீரர்களை ஏற்றிச் செல்லும் திறன் உடையவை ஆகும், உலகம் முழுவதும் அமெரிக்கா இதை பயன்படுத்தி வருகிறது. இந்த கப்பல்கள் அண்மையில் தென் சீன கடல் பகுதியில் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ரோந்து பணியில் ஈடுபட்டன.
போர் பயிற்சி
இந்த பணியை முடித்துவிட்டு அமெரிக்காவின் நிமிட்ஸ் போர்க்கப்பல் உள்ளிட்ட அமெரிக்காவின் போர்கப்பல்கள் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தன. பாரசீக வளைகுடா பகுதியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த மிகப்பெரிய அணு ஆயுத கப்பலான அமெரிக்காவின் நிமிட்ஸ் போர்க்கப்பல் மற்றும் அவற்றுடன் வந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் கடற்படை கப்பல்கள், இந்திய போர்க்கப்பல்களுடன் இணைந்து கூட்டு ரோந்து பயிற்சியை வரும் திங்கள்கிழமை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கடற்படை
இதனிடையே அமெரிக்க போர் கப்பலான நிமிட்ஸ் உடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக இந்திய கடற்படையிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இப்போது வரை வெளியிடவில்லை. எனினும் வாய்ப்பு உருவாகும் போதெல்லாம் இந்திய கடற்படை அதன் நட்பு நாடுகளுடன் கடற் பயிற்சி நடத்தி வருகிறது. எனவே நிமிட்ஸ் உடன் போர் பயிற்சி நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த பயிற்சி என்பது சீனாவுக்கு மறைமுகமாக அமெரிக்கா மற்றும் இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.