நேற்றை விட இன்று அதிகம்... தமிழகத்தில் இன்றும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. சென்னையை விடாத வைரஸ்
சென்னை: தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பானது நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையை கொரோனா வைரஸ் விடாத நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 617 பேர் குணமாகி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருவதால் தான் இந்த அறிவுரைகளை அவர் வழங்கி உள்ளார்.
முடிவே இல்லயா... தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! மக்களே உஷாரா இருங்க!
இன்றைய பாதிப்பு எவ்வளவு?
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. நேற்று 1,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதாவது இன்று 1,382 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உறுதியாகி உள்ளது.
5,921 பேருக்கு சிகிச்சை
அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 617 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் இல்லை. இன்றைய பாதிப்போடு சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 6677 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 5912ஆக இருந்தது. இதன்மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சென்னையில் அதிகம்
இன்றைய பாதிப்பை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக சென்னையில் 607 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய 616 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 240 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும், கோவையில் 89 பேர், திருவள்ளூரில் 83 பேர், காஞ்சிபுரத்தில் 66 பேர், தூத்துக்குடியில் 60 பேர் கன்னியாகுமரியில் 49 பேர், விருதுநகரில் 26 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களிலும் பாதிப்பு பதிவாகி உள்ளது.
இதுவரை எவ்வளவு?
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 22 ஆயிரத்து 169 பேர் குணமாகி உள்ளனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.