தமிழ்நாட்டையே குளிர்வித்த மழை.. 122 ஆண்டுகளில் இதுதான் மூன்றாவது அதிகபட்ச சாதனை!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை நீடித்து வரும் நிலையில், பல இடங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
கடந்த 122 ஆண்டுகளில் தற்போது பெய்துள்ள மழை 3வது அதிகபட்ச மழை பொழிவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் உள்பகுதிகளில் செப்டம்பர் 5 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கனமழை: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பருவமழை
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாத்தில் தொடங்கிய பருவமழை பரவலாக கொட்டி தீர்த்துள்ளது. வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் இயல்பான அளவும், வட மாவட்டங்களில் குறைந்த அளவிலும் மழை பதிவாகும். ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வட தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் மழை அதிகமான அளவில் பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வட மாவட்டங்களிலும் மழை
நேற்று சென்னை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்ததால் இது வடகிழக்கு பருவமழையின் ஒரு நாளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. வியாழக்கிழமையான நேற்று சென்னையின் புறநகர் பகுதியான மாதாவரம், வில்லிவாக்கம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. தமிழ்நாட்டில் கடந்த 122 ஆண்டுகளில் தற்போது பெய்துள்ள மழை 3வது அதிகபட்ச மழை பொழிவாகும்.
அடுத்த 5 நாட்களுக்கு
வெள்ளிக்கிழமையான இன்று மழை லேசாக குறைந்தாலும், வரும் 4ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள 9 மாவட்டங்களில் இன்று(செப்.2) நீடிக்கும் என்றும், இதே வானிலை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் பகல் வெப்பநிலை குறைந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம் மற்றும் சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது, இது சராசரி வெப்பநிலையை விட கிட்டத்தட்ட ஆறு டிகிரி செல்சியஸ் குறைவாகும். இதேபோல், திருப்பத்தூர் மற்றும் திருச்சியில் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூன் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சராசரி மழையளவை விட 88 சதவீதம் கூடுதலாக அதாவது 40 செ.மீ மழை கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மழை வரலாறு
மேலும் அவர் கூறியதாவது, "குறிப்பாக கோவை, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பருவமழை 100% அதிகமாக பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 17.4 செ.மீ மழை பெய்துள்ளது. இது அந்த மாதத்தின் இயல்பை விட 93% அதிகமாகும். கடந்த 122 ஆண்டுகளில் தற்போது பெய்துள்ள மழை 3வது அதிகபட்ச மழை பதிவாகும். முதன் முறையாக 1906ம் ஆண்டு ஆகஸ்டில் 112% உபரி மழையும், இரண்டாவதாக 1909ம் ஆண்டு ஆகஸ்டில் 127% மிகை மழையும் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது" என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.