தமிழகத்தில் திமுக விஸ்வரூபம் எடுக்கும்..எதிர்கட்சிகள் 50 சீட்டுகளை தாண்டாது.. பிரசாந்த் கிஷோர் பளீச்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, அமமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 50க்கும் குறைவான இடங்களையே பெறும் எனத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த மாதம் புதிய அரசு பதவியேற்க வேண்டியுள்ளது. தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது,
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை மேற்கு வங்கத்தில் நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அனைத்து தேர்தல் முடிவுகளும் வரும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகள் 50 இடங்களைத் தாண்டாது
தமிழ்நாட்டில் திமுகவிற்கும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். இந்நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் மொத்தமாகச் சேர்ந்து 50 இடங்களைக் கூடப் பெறாது என அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தான் வகுத்து கொடுத்த திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வங்கத்து தேர்தல்
தொடர்ந்து மேற்கு வங்க தேர்தல் குறித்துப் பேசிய அவர், டிசம்பர் மாதமே நான் இது குறித்துக் குறிப்பிட்டேன். பாஜக 100 தொகுதிகளைத் தாண்டாது. அப்படித் தாண்டினால் நான் எனது தொழிலை விட்டு விடுகிறேன். சொல்லப்போனால் இப்போது எனது நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பாஜக நிச்சயம் மேற்கு வங்கத்தில் 100 இடங்களைத் தாண்டாது. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.
மம்தா பானர்ஜி
200க்கு மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தீவிரமாகப் போராடி வருகிறார். மம்தா தனது மக்களுக்காகப் போராடினால், அவர் பதற்றம் அடைந்துவிட்டார் எனச் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் முடிவு வரும் 2ஆம் தேதி தெரியவரும் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறை
மேற்கு வங்க தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், இந்த சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தவறுள்ளதாக மம்தா கூறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் அப்படிக் கூறுகிறார். இதுவரை அங்கு நடைபெற்ற தேர்தல்களில் வன்முறையைத் தடுக்க தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. திரிணாமுல் மற்றும் பாஜக என யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வில்லனைப் போலச் சித்தரிக்க பாஜக முயல்கிறது எனக் கூறினார்.
மீண்டும் அரசியல்
அரசியலில் மீண்டும் நுழைவது குறித்துப் பேசிய அவர், எனது முதல் அரசியல் அனுபவம் தோல்வியில் முடிந்தது. அதிலிருந்து நிறையப் பாடங்களை கற்றுள்ளேன். அடுத்த முறை முழுவதுமாக தயார் ஆகிய பின்னரே அரசியலுக்கு நுழைவேன். இது வெறும் தற்காலிகம் தான். நிச்சயமாக அரசியலில் மீண்டும் நுழைவேன். வாழ்நாள் முழுவதும் தேர்தல் ஆலோசகராகவே இருந்துவிட மாட்டேன். தோல்வியைக் கண்டும் நான் பயப்பட மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.