அன்புச்செழியனை விடாமல் துரத்தும் வருமான வரித்துறை.. இன்றும் சோதனை.. கிடுக்கிப்பிடி விசாரணை!
நேற்று பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிந்த நிலையில் பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகளில் 3-வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை: நேற்று பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிந்த நிலையில் பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகளில் 3-வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இன்று தொடர்ந்து வருகிறது. நேற்றும் நேற்று முதல் நாளும் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆனால் இதில் ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதனால் நேற்றே அங்கு சோதனை முடித்துக் கொள்ளப்பட்டது.
அதே சமயம் நேற்று பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்திலும் , அதன் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. இந்த சோதனையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் முடியவில்லை
ஆனால் அன்புச்செழியனின் வீடுகளில் இன்னும் சோதனை முடியவில்லை. அவர் வீடுகளில் நேற்று இரவு சோதனை நடந்தது. இன்று காலையும் மீண்டும் சோதனை தொடங்கி நடந்து வருகிறது. அவருக்கு சென்னை மற்றும் மதுரையில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இருக்கிறது. இரண்டு நகரங்களிலும் 22 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அன்புச்செழியனின் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

எங்கு
இதில் படத்தின் பைனான்சியர் அன்புச்செழியன் தன்னுடைய பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் இவர் பணம், ஆவணங்களை பதுக்கி வைத்து இருந்தார். இதுதான் வருமான வரித்துறை அவரை விடாமல் துரத்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறை சோதனையில் இவர் மறைத்து வைத்து இருந்த பத்திரங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7 பைகள்
இவரின் வீட்டில் இருந்துதான் கணக்கில் வராத 7 பைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 100 ரூபாய், 500 ரூபாய் கொண்ட கட்டுகள் இந்த பையில் இருந்துள்ளது. இவர் பிகில் படத்திற்கு முன்பே வரி ஏய்ப்பு செய்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் இவர் இதற்கு முன் பைனான்ஸ் செய்த படங்கள். அதற்கு அவர் வாங்கிய வட்டி எல்லாமும் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

எவ்வளவு பணம்
இன்றைய சோதனையில் அன்புச்செழியனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள், விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. பிகில் படம் மூலம் இவர் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், பென் டிரைவ்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரின் வீட்டில் இன்று முழுக்க வருமான வரி சோதனை நடக்கும். இன்று மாலை இது தொடர்பாக முக்கியமான வருமான வரித்துறை அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications