சர்வதேச பீதி தினம்: பதற்றம் வேண்டாம் - மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருப்போம்
சென்னை: எதற்கெடுத்தாலும் பதற்றம் பயம், ஒரு வித பீதி, அச்சத்தோடு வாழ்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தம் மனிதர்களுக்கு பல நோய்களை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் அச்சமின்றியும் மன அழுத்தம் இன்றியும் வாழ வேண்டும் என்பதற்காகவே சர்வதேச பீதி தினம் International Panic Day ஜூன் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
பீதி panic என்ற சொல் pan கிரேக்க நாட்டின் மேய்ப்பன் கடவுளிடம் இருந்து பெறப்பட்டது. அவர்தான் காட்டில் பயணிப்பவர்களுக்கு ஒருவித சத்தத்தின் மூலம் அச்சத்தை ஏற்படுத்துவார். மனிதர்கள் பயப்படுவதைப் பார்த்து சந்தோஷமடைவார் என்றும் கிரேக்கர்களிடையே நம்பப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில் மக்கள் எதற்கெடுத்தாலும் பீதியடைகிறார்கள். பயமும் பதற்றமும் இணைந்து ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட காலமாக இருக்கும் மன அழுத்தம் அவரின் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது. வயிற்றில் அல்சர், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலை நோய்களின் கூடாரமாக மாற்றுகிறது.
மன அழுத்தம் வேலையை பாதிக்கும் உறவுகளை இழக்க வைக்கும் வெறுக்க தூண்டும். நாள்பட்ட மன அழுத்தம் ஒருவரின் உயிருக்கே ஆபத்தாகும் எனவேதான் மனிதர்கள் அச்சமின்றி பீதியின்றி வாழ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பீதி தினம் கடைபிடிக்கிறார்கள்.
மன அழுத்தத்தை சரி செய்யவும் நிர்வகிக்கவும் கற்றுக்கொடுக்கிறது. இதன் மூலம் பீதியடைவதில் இருந்து தப்பிக்கலாம். ஒரே வேலையை தொடர்ந்து செய்யாமல் ஓய்வெடுக்கலாம். நல்ல புத்தகங்களை படிக்கலாம். வேலையில் இருந்து சற்றே விலகி ஓய்வெடுக்கலாம். மனதிற்கு பிடித்தமான இசையை கேட்கலாம். இயற்கையோடு தொடர்பு கொண்டு மனதை அமைதிபடுத்தலாம். நிதானமாக எதையும் அணுகுங்கள் உங்களின் பொன்னான நேரத்தை நல்ல விசயங்களில் முதலீடு செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மனநல நிபுணர்கள்.
நாங்க எல்லாம் சும்மா பீதிக்கே பீதி காட்டுவோம் என்கிறீர்களா?












Click it and Unblock the Notifications