சர்வதேச புலிகள் தினம்..தமிழகம் முன்னோடி..சென்னையில் புலிகள் உச்சி மாநாடு.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

சர்வதேச புலிகள் தினம் 2022 க்கான கருப்பொருள் "புலிகளின் எண்ணிக்கையை புதுப்பிக்க இந்தியா புலிகளின் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது" என்பதாகும். புலிகளைப் பாதுகாக்க பிராந்திய மக்களுடன் ஒத்துழைக்கும் முயற்சிகளை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது.
உலக வனவிலங்கு நிதியத்தின்படி, கடந்த நூற்றாண்டில் 97 சதவீத புலிகள் மறைந்து விட்டதாகவும், சுமார் 3,000 புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் கண்டறியப்பட்டதை அடுத்து 2010 ஆம் ஆண்டு சர்வதேச புலிகள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
புலிகள் அழிவின் விளிம்பில் இருப்பதால், நிலைமை மோசமடைவதைத் தடுக்க ரஷ்யாவில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டில் பல நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகளுடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உள்ளது.
புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications