ஸ்டம்பில் விழுந்த கிரிக்கெட் வீரர்.. செந்தில்குமாரா அது? பாஜகவினர் பகிர்ந்த வீடியோ! தரமான பதில்
சென்னை: கிரிக்கெட் போட்டியின்போது உடல் பருமனான பேட்ஸ்மேன் ஒருவர் பந்தை ஓங்கி அடிக்கும்போது நிலைத்தடுமாறி ஸ்டம்பில் விழும் வீடியோவை பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் பகிர்ந்து அது திமுக எம்.பி செந்தில்குமார் என்று கூறி வரும் நிலையில் அது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வருபவர். பொதுமக்கள் கேள்விகள், கோரிக்கைகளுக்கு அதிலேயே விளக்கமும் அளித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி ட்விட்டரில் அரசியல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களையும், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
“பூஜை” கல்லை எட்டி உதைத்தேனா? மன்னிப்பு கேளுங்க “சுமந்த்”! போலீசில் புகாரளித்த எம்பி செந்தில்குமார்
எம்.பி. செந்தில்குமார்
பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் செந்தில்குமார். அதேபோல் திமுகவுக்கு எதிராகவோ அல்லது தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ பிற கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடியையும் அவர் கொடுத்து வருகிறார்.
பூஜை
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தருமபுரியில் அரசு திட்டம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் ஒரு மத சடங்கின் அடிப்படையில் பூஜை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக செந்தில்குமார் மீது வதந்திகளும் கிளப்பி விடப்படுகின்றன.
வதந்திகள்
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக செந்தில்குமார் பூஜை செய்த கல்லை காலால் எட்டி உதைத்ததாக செய்திகள் பகிரப்பட்ட நிலையில் அது தவறான தகவல் என்று விளக்கி இருந்தார் செந்தில்குமார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஒரு வீடியோவை வலதுசாரிகள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து இருகின்றனர்.
ஸ்டம்பில் விழுந்த பேட்ஸ்மேன்
அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற எந்த விபரமும் இல்லை. ஒரு லோக்கல் கிரிக்கெட் போட்டி என்று மட்டும் தெரிகிறது. பேட்டிங் செய்துகொண்டிருக்கும் உடல் பருமனான பேட்ஸ்மேன் பந்தை ஓங்கி அடிக்க முயலும்போது நிலை தடுமாறி தனக்கு பின்னால் இருக்கு ஸ்டம்பில் சுற்றிக்கொண்டு விழுவார். இது செந்தில்குமார்தான் என்று அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
செந்தில்குமார் விளக்கம்
இதுகுறித்து செந்தில்குமார் ட்விட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், "பேட் பிடிப்பது இருக்கட்டும். நான் கிரிக்கெட் மைதானம் பக்கம் கூட சென்றது இல்லை. அது போகட்டும். யாரோ ஒருவர் கீழே விழுவது நான் இல்லை என்று தெரிந்தும், ஏன் பாவம் அவரை வைத்து கிண்டல். ஒரு கேமரா எடுத்து வாருங்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் விழுகிறேன். பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.