ஈபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?- பாயிண்டை கையில் எடுத்த ஓபிஎஸ் டீம்.. ‘திரும்பவும் சொல்லலாமா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும், கற்பனையானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகப் பதிவு செய்த பின்னரும், எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை மாற்றிக் கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போதும், ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் காலாவதி ஆகிவிட்டது என்றே கூறினார் எடப்பாடி பழனிசாமி. இதனை ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் மகிழ்ச்சி நீடிக்கலையே.. 'அப்செட்’ - குறுக்கே விழுந்த '3 தடைகள்’ - எழுந்து அமர்ந்த எடப்பாடி!
ஈபிஎஸ் பேட்டி
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், கட்சி ஒற்றுமையே முக்கியம். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிணைந்து செயல்பட நேரடியாகவே அழைப்பு விடுத்திருந்தார் ஓபிஎஸ். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் பலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்தால், தனது செல்வாக்கை பொதுக்குழுவில் நிரூபிக்கட்டும், அவருடன் இணைந்து செயல்பட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
காலாவதி ஆனது
மேலும், பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம். செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம் எனத் தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் தரப்பினர் சாடல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையின்போதே ஒருங்கிணைப்பாளர் பதவி எப்படி காலாவதி ஆகும் என கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஈபிஎஸ் தரப்பால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. இதையடுத்து தீர்ப்பிலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆனதாக கூறுவது அடிப்படையற்ற வாதம் எனக் கடுமையாகத் தெரிவித்திருந்தார். ஆனாலும், ஈபிஎஸ் மீண்டும் மீண்டும் அதனையே கூறி வருவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கு நேர் எதிரான கருத்தை எடப்பாடி பழனிசாமி பேசி வருவதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியும் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பது எனக் கருத்துக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பில் இருந்தது என்ன?
ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை என நேற்று வெளியான நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்ன நடக்கும்?
நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறப்பட்டால் அதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக்கூடும். அதேநேரம், இந்த குறிப்பிட்ட தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு செய்திருப்பதால், அந்தத் தீர்ப்பை ஈபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிறது. எனவே தான் வைக்கும் வாதங்களை சுட்டிக்காட்டுவதை நீதிமன்றத்தை அவமதித்ததாக கருத முடியாது என்கிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர். இந்த விவகாரம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்லுமா? அல்லது விமர்சனங்களோடு முடிந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.