பறக்கும் காவி கொடி.. நைஸாக ஷிப்ட்டாகும் ஓட்டுகள்.. "கொத்தாக" பாஜகவுக்கு தாவும் "முக்கியஸ்தர்கள்"
தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுகவில் உள்ள வாக்காளர்கள், அப்படியே பாஜக பக்கம் திரும்பி உள்ளதாகவும், இவர்களின் வாக்குகள்தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை ஓரளவு வெற்றி பெற வைக்க உறுதுணையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் சொல்லத்தகுந்த வெற்றியை பாஜக பெற்றுள்ளது.. குறிப்பாக, 21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது... 242 பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது..
சென்னை மாநகராட்சியில், 134வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்... கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், 12ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

விமர்சனங்கள்
சுருக்கமாக சொன்னால், சென்னை, கோவை உட்பட முக்கிய மாநகராட்சிகளின் பல வார்டுகளில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளி 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இதையடுத்து, விமர்சனங்களை தகர்த்தெறிந்துள்ளது.. இது பாஜக தரப்பினருக்கு புது தெம்பையே ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் பொறுப்பாளர்களும் சிறப்பாகவே தங்கள் பணியினை செய்தனர் என்பதையும் மறுக்க முடியாது.. பொன்.ராதா சொன்னதுபோல், பாஜக தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்பதையும் ஓரளவு ஏற்கவே செய்யலாம். அதேசமயம், பாஜகவின் இந்த வெற்றிக்கான அடிப்படை காரணமும், இந்த வெற்றி அடுத்ததாக அரசியல் களத்தில் ஏற்படுத்த போகும் மாற்றமும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

யூடர்ன்
அதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்களின் கருத்து இதுதான்: "பிராமண சமூகத்தினரின் பெரும்பான்மை கட்சி சொல்லப்படும் பாஜகவில் இந்த முறை கைகொடுத்திருப்பதும் அச்சமூகத்தினரின் வாக்குகள்தான் என்பதில் சந்தேகமில்லை.. இத்தனை காலமும் அதிமுகவுக்கு வாக்கு செலுத்தியவர்களில் பெரும்பாலானோர், அப்படியே பாஜக பக்கம் யூடர்ன் அடித்து திரும்பி வந்துள்ளனர்.. இது நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளிலும் பிரதிபலித்திருக்கிறது.

ஜெயலலிதா
இன்னும் ஓபனாக சொல்லப்போனால், பாஜகவுக்கு இத்தனை காலமும் ஒரு சரியான தலைமை இல்லாதநிலையில், பாஜக ஆதரவாளர்கள் பலர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கே வாக்குகளை செலுத்தி வந்தனர். பாஜக என்ற தனி கட்சி முன்பிருந்தே தமிழகத்தில் செயல்பட்டு வந்தாலும்கூட, அக்கட்சிக்கு ஓட்டுப்போடாமல், ஜெயலலிதாவுக்குதான் ஓட்டுப் போட்டனர்.. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை..

பாஜக ஆதரவாளர்கள்
ஜெயலலிதாவும் உயிருடன் இல்லாத பட்சத்தில், அதிமுகவும் மெல்ல மெல்ல தேய்ந்து வரும் பட்சத்தில், பாஜகவையே அதிமுக கழட்டிவிட துணிந்த பட்சத்தில், இனி எதற்காக அதிமுகவுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற எண்ணம், பாஜக ஆதரவாளர்களிடம் மேலோங்கிவிட்டது.. அதனால்தான், பெரும்பான்மை சமுதாயத்தின் ஓட்டுக்களும் சரி, பாஜக ஆதரவாளர்களின் ஓட்டுக்களும் சரி, சிந்தாமல் சிதையாமல் அக்கட்சிக்கே போய்சேர்ந்துள்ளது.

பிராமணர்கள்
அதுமட்டுமல்ல, இப்படி ஓட்டுப்போடுவதால், பாஜகவை வெற்றி பெற வைத்து அடுத்தக்கட்டத்துக்கு அக்கட்சியை பலப்படுத்தி கொண்டு செல்ல முடியும் என்றும் இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.. அதைதான் மேற்கு மாம்பலத்தில் உமா ஆனந்தன் மூலம் நிறைவேற்றி உள்ளனர்.. இந்த இடத்தில் கமல் செய்த ஒரு காரியத்தையும் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. பிராமணர்கள் அடர்த்தியாக வாழும் இந்த பகுதியில், மநீம சார்பாக டெய்சி புஷ்பராஜ் என்ற கிறிஸ்துவ வேட்பாளரை கமல் நிறுத்த காரணம் என்ன? ஒருவேளை பிராமண ஓட்டுகள் சிதறக்கூடாது என்று நினைத்தாரா? என்ற விமர்சனங்களையும் சாதாரணமாக கடந்து விட முடியவில்லை.

பெரும்பான்மை சமூகம்
இதுபோன்ற காரணங்களை எல்லாம், அதிமுகவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரும் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். எனவே, அதிமுகவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரும் விரைவில் பாஜக பக்கம் திரும்பி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

ஊழல் வெறுப்பு
இதுபோக, மற்ற கட்சிகளில் உள்ள திமுக எதிர்ப்பாளர்கள், இந்தி ஆதரவாளர்கள், ஊழலை வெறுப்பவர்கள் போன்றோரும் பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதால், அந்தகட்சிக்கு வாக்களிக்கூடிய மனநிலைமைக்கு வந்துள்ளனர்.. காரணம், அதிமுகவின் மாஜிக்கள் ஊழல் வழக்குகளில் ஒவ்வொருவராக சிக்கி கொண்டு வருவதுதான்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதமரின் ஆயுள் காப்பீடு, விவசாய ஊக்கத்தொகை, இலவச கேஸ் இணைப்பு, இலவச வீடு உள்ளிட்ட திட்டங்களால் நேரடியாக பயன்பெற்றவர்களும் பாஜகவுக்கு வாக்களிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர் போலும்.

பயனுள்ள திட்டங்கள்
இதெல்லாம் பாஜகவுக்கான கள ரீதியான மதிப்பை கூட்டி உள்ளது.. வருங்காலத்திலும் இது கூடவே செய்யும்.. வாக்கு சதவீதமும் பாஜகவுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் இனி உயரக்கூடும்.. அதாவது, திமுகவுக்கு இணையாக பணம் செலவழிக்கக் கூடிய கட்சியாக பாஜக உருமாற துவங்கிவிட்டது.. ஆக, அதிமுக மீதான அதிருப்தியும், திமுக மீதான சில வெறுப்புணர்வும்தான், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணமாக இருக்கிறதே தவிர, தமிழக பாஜகவின் சாதனையோ, நற்செயல்களோ, பயனுள்ள திட்டங்களோ இல்லை.

வியூகம்
அதிமுகவை விட திமுகவை எதிர்த்து பாஜகதான் அதிக போராட்டங்களை நடத்தியுள்ளது. எனவே பாஜக தமிழக தலைவர் தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கிறார். எடப்பாடி இருந்த இடமே தெரியவில்லை. ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கருணாநிதி தொடர்ந்து லைம் லைட்டில் இருப்பார். அப்படியான ஒரு வியூகத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. சர்ச்சை விஷயமாகவே இருந்தாலும் செய்திகளில் பாஜக பெயர் அடிபடுகிறது. இது அதிமுகவிற்கு மாற்றாக பாஜகவை உருவெடுக்க வைத்து அந்த பக்கமாக அதிமுக வாக்காளர்களை தள்ளிக் கொண்டு போக வைக்கிறது.

கவர்ச்சிகரமான தலைமை
அதிமுக தலைமை கவர்ச்சிகர தலைமையோ, பேச்சாற்றல் கொண்ட தலைமையோ இல்லை. அதுவும் காரணம். அதிமுக பாணியில் பல நடிகர் நடிகைகளை பாஜக தங்கள் கட்சியில் சேர்த்து பிரச்சாரம் செய்ய வைக்கிறது. அதிமுகவின் இந்த டிரேட் மார்க் இப்போது இல்லை. எனவே கிராமப்புற பெண்கள் மத்தியில் பாஜகவிற்கு செல்வாக்கு கூட வாய்ப்புள்ளது" என்றனர்.

அபாய மணி
அதேசமயம், பாஜகவின் இந்த வளர்ச்சியானது திமுகவுக்கான அபாய மணியாகவும் எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.. எத்தனையோ இடங்களில் அதிமுகவை முந்திக் கொண்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றால், அண்ணாமலை சொல்வது போல, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்ற கூற்று உண்மையாகிவிடுமோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. எங்கெல்லாம் பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களும் அதிக அளவில் கூடி உள்ளனரோ, அங்கெல்லாம் காவி கொடி உயர பறக்க ஆரம்பித்துவிட்டது.
Recommended Video

கன்னியாகுமரி
அவ்வளவு ஏன், கன்னியாகுமரியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை பாஜக திணறடித்துள்ளது என்றால், இதையும் திமுக கவனிக்க வேண்டி உள்ளது.. காரணம் இரு கட்சிகளுமே கூட்டணியில்தான் உள்ளன.. இத்தனைக்கும் அதிமுகவில் இல்லாத பாஜக, இக்கட்சிகளை முந்தியுள்ளது.. ஆக, நகர்ப்புற தேர்தலானது ஏதோ ஒரு எச்சரிக்கை மணியை திமுகவுக்கும் அடித்து விட்டு சென்றதாகவே தெரிகிறது..!












Click it and Unblock the Notifications