முதல் கையெழுத்து போடும்போது வாட்ச்சை பார்த்த அமைச்சர் உதயநிதி.. நல்லநேரம் பார்த்தாரா? நடந்தது இதான்!
சென்னை : அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது முதல் கோப்பில் கையெழுத்திடும்போது கடிகாரத்தில் நல்ல நேரம் பார்த்ததாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உதயநிதி கையெழுத்து போட்ட பிறகே, தனது ஸ்மார்ட் வாட்ச்சைப் பார்த்துள்ளார். அதுவும், அமைச்சர் கே.என்.நேரு, தேதி குறிப்பிட வேண்டும் எனச் சொல்லிய பிறகுதான். இது வீடியோ காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று காலை பதவி ஏற்று கொண்டார்.
அமைச்சரான பிறகு முதல் கையெழுத்து போட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின், தனது ஸ்மார்ட் வாட்ச்சை பார்த்தார். இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, நல்ல நேரம் பார்த்துத்தான் உதயநிதி, கோப்பில் கையெழுத்து போட்டார் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சராக உதயநிதி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தழமிஅக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக நேற்று காலை பதவி ஏற்று கொண்டார். அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பேனா கொடுத்த நேரு
அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்தபிறகு, தலைமை செயலகத்தில் தனது அறைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் அமர வைத்தார். இருக்கையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார். உதயநிதி ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்து போடுவதற்கு, தான் வைத்திருந்த பேனாவை கொடுத்தார் அமைச்சர் கே.என்.நேரு. கையெழுத்து போட்டு முடித்ததும், அந்தப் பேனாவை உதயநிதிக்கே பரிசாக அளித்தார்.

3 கோப்புகளில் கையெழுத்து
அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் விளையாட்டில், வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நிவேதிதாவுக்கு 4 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.

வாட்ச் பார்த்த உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல் கையெழுத்து போட்ட பிறகு தனது ஸ்மார்ட் வாட்ச்சை பார்த்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. உதயநிதி ஸ்டாலின், கையெழுத்துப் போடுவதற்கு முன்பு நல்ல நேரம் பார்த்ததாகவும், பகுத்தறிவு பேசும் திமுகவில் இருந்துகொண்டு அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அவர், முதல் கோப்பில் கையெழுத்திடுவதற்கு மட்டும் நல்ல நேரம் பார்ப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தனர்.

தேதி பார்த்தார்
ஆனால், உதயநிதி ஸ்டாலின், தனது ஸ்மார்ட் வாட்ச்சை பார்த்தது தேதி பார்க்கத்தான் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இட்டதும், அருகில் நின்றிருந்த அமைச்சர் கே.என்.நேரு, கையெழுத்து அருகில் தேதியை குறிப்பிடுமாறு கூறினார். இதையடுத்தே, உதயநிதி தனது ஸ்மார்ட் வாட்ச்சில் தேதியைப் பார்த்தார் எனக் கூறப்படுகிறது. இது, வீடியோ காட்சிகளிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்ட பிறகு, அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பிறகுதான் வாட்ச்சைப் பார்க்கிறார்.

தொடர்ந்து அழைப்புகள்
மேலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு அவருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக தொடர்ந்து அவருக்கு செல்போன் அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அது உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் டிஸ்பிளே ஆகிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால், யார் அழைப்பது என உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி வாட்ச்சை பார்த்துக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications