நியாயமற்றது, பகுத்தறிவற்றது.. மத்திய அரசின் வேக்சின் கொள்கையை.. சரமாரியாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்
சென்னை: மத்திய அரசின் வேக்சின் கொள்கை நியாயமற்றது, பகுத்தறிவற்றது என்றது உச்ச நீதிமன்றம் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மத்திய அரசின் வேக்சின் கொள்கை தொடங்கி ஆக்சிஜன் தட்டுப்பாடு வரை பல விஷயங்களை உச்ச நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் மத்திய அரசின் வேக்சின் கொள்கை தொடர்பாக கடுமையான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
விசாரணை
இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் 18-44 வயது கொண்டவர்களுக்கான மத்திய அரசின் வேக்சின் கொள்கையை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. அதில், 18-44 வயது கொண்டவர்களுக்கு இலவசமாக வேக்சின் அளிக்காத மத்திய அரசின் கொள்கை தவறானது. இந்த பெருந்தொற்று நாட்கள் செல்ல செல்ல மாறிக்கொண்டு இருக்கிறது. தீவிரம் அடைகிறது. இதனால் 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேக்சின் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
45 வயது
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி வேக்சின் தேவையோ அதேபோல் 18-44 வயது கொண்டவர்களுக்கும் வேக்சின் இலவசமாக தேவை. முதல் 2 கட்ட வேக்சின் திட்டம் இலவசமாக் கொடுக்கப்பட்ட நிலையில், 18-44 வயது கொண்டவர்களுக்கு வேக்சின் போட கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம் நியாயமற்றது, பகுத்தறிவற்றது.
வேக்சின் கொள்கை
இந்த கொரோனா வைரஸ் மியூட்டேட் ஆகும் திறன் கொண்டது. இதனால் 18-44 வயதுக்கு இடைப்பட்டவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். இளம் வயதில் பலர் பலியாகிறார்கள்.
தவறு
இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசின் தாராளமயமாக்கப்பட்ட வேக்சின் கொள்கை தவறானது. மத்திய அரசின் வேக்சினை இலவசமாக அளிக்காத கொள்கை காரணமாக சிலர் வேக்சின் போட்டுக்கொள்ள தனியார் மருத்துவமனைகளிலும், சில மாநிலங்களிலும் காசு கொடுத்து வேக்சின் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வேக்சின் கிடைத்தது.
வேக்சின் இல்லை
ஆனால் 18-44 வயதுக்கு இடைப்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு கோவின் ஆப்பில் ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும் போன்ற விதிகள் காரணமாக பலருக்கு வேக்சின் கிடைக்காத ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் பலர் வேக்சின் பெற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது பகுத்தறிவற்ற வேக்சின் கொள்கை என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.