தடுக்க முடியாது.. கட்சிகளின் வாக்குறுதிகளை இலவசங்கள் என்று கூறுவதே தவறு.. திமுக எம்பி வில்சன்!
சென்னை: அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்திருந்த பொதுநலன் வழக்கு இன்று நேரலையில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த திமுக எம்பி வில்சன், "கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும்போது அதனை தடை செய்யவோ, குழு ஆலோசனைக்கு உட்படுத்தவோ நீதிமன்றங்களால் முடியாது. அதனை இலவசம் என்று சொல்வதே தவறு" என்று கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து சில பொதுநல மனுக்களும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், "அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அமர்வு கூறியது.
மேலும், இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுக்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியும் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கும் தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த திமுக எம்.பி வில்சன், "உச்சநீதிமன்றம் இன்று தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது குறித்த வழக்கை நிராகரித்து, விரிவான விவாதத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை முதலில் இலவசம் என்பதே தவறு." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் நலனுக்காக, தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, அந்த நேரத்தில் மக்கள் கொடுக்கும் வாக்குகளை கொண்டு வெற்றி பெற்ற பின், சட்டமன்றத்தில் வைத்து அவை மக்களுக்கு திட்டங்களாக அறிவிக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் நீதிமன்ற விசாரணைக்குள் வராது. ஆர்ட்டிகல் 37 படி நீதிமன்றங்கள் நேரடியாக இதை தடை விதிக்க முடியாது. ஒரு அரசியல் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கும் போது, அதனை தடை செய்யவோ அல்லது குழு ஆலோசனைக்கு உட்படுத்தவோ நீதிமன்றங்களால் முடியாது.
எங்களது வாதம் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு எடுத்து விசாரிக்க, விவாதத்திற்கு தலைமை நீதிபதி அமர்வின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, அரசின் மற்ற விஷயங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இந்த வழக்கில் திமுக தக்க நேரத்தில் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு, மக்கள் நலனுக்காக தான் இந்த வாக்குறுதிகள் கொண்டு வரப்பட்டது, நீதிமன்றங்கள் இதில் தலையிட கூடாது என கூறியதால் நீதிமன்றம் தடை விதிக்காமல் விவாதத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்" என திமுக எம்பி தனது பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications