உலக கால்பந்தாட்டத்தின் கறுப்பு முத்து பீலே! விளையாட்டு உலகிற்கே பேரிழப்பு! ஜவாஹிருல்லா உருக்கம்!
சென்னை: கால் பந்து விளையாட்டு வீரரும், பிரேசில் நாட்டின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான பீலே மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலக கால்பந்தாட்டத்தின் கறுப்பு முத்து பீலே என அவரை வர்ணித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

கால்பந்து விளையாட்டு
உலக கால்பந்தாட்டத்தின் கறுப்பு முத்து என்று வர்ணிக்கப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரருமான பீலே. புற்றுநோயால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

வரலாற்றில் அதிக கோல்கள்
கால்பந்து வரலாற்றில் மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் பீலே. 92 போட்டிகளில் 77 கோல்கள் அடித்து பிரேசிலின் வரலாற்றில் அதிகக் கோல்கள் அடித்தவர்களில் முதன்மையானவராக விளங்கினார். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட கோல்கள் மட்டுமின்றி ஹாட்ரிக் கோல்களில் உலக சாதனையும் படைத்துள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார்.

விளையாட்டுத்துறை மந்திரி
பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பீலே இருந்திருக்கிறார்.கால்பந்து விளையாட தொடங்கும் ஒவ்வொரு வீரரும் பீலேயின் பெயரை உச்சரிக்காமல் தனது கால்களை முன்னே நகர்த்தியதில்லை. அந்த அளவுக்குக் கால்பந்து விளையாட்டும், பீலேயும் பிரிக்க முடியாததாக விளங்கினார்கள். கடந்த 1994ம் ஆண்டு யுனெஸ்கோவின் நல்லெண்ண தூதராக பீலே நியமிக்கப்பட்டார்.

பேரிழப்பு
விளையாட்டு களத்திலும் சமூகத் தளத்திலும் சிறப்பான ஈடு செய்ய முடியாத பங்களிப்பை வழங்கி உள்ள பீலே வின் மறைவு விளையாட்டு உலகிற்குப் பேரிழப்பு ஆகும். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications