கால்நடை மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை மருத்துவர்னு அழைக்காதீர்.. ஆறுமுகசாமி அறிக்கை பிளாஷ்பேக்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கோலோச்சினார். அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களை எதிர்நீச்சல் போட்டு கடப்பது எப்படி என்பதற்கு எடுத்துக்காட்டாக இரும்பு பெண்மணியாக பலருக்கு ஜெயலலிதா ஊக்கம் அளித்துள்ளார். பல பெண்கள் துணிந்து அரசியலுக்கு வர ஜெயலலிதாவும் ஒரு காரணம் என இன்று அரசியலில் சோபிக்கும் பெண்கள் கூறியதை கேட்டுள்ளோம்.
அப்படிப்பட்ட ஆளுமைத் திறன் கொண்ட ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நல குறைபாடு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி வந்ததை அடுத்து 2017 ஆம் ஆண்டு அதிமுக அரசால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
5 அடி தான் உயரம்.. உடல் எடை 100 கிலோ! ஜெயலலிதா உடல்நிலை இப்படித்தான் இருந்தது! ஆறுமுகசாமி தகவல்!
150 பேரிடம் சாட்சியம்
இந்த ஆணையம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் 150 -க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அனைத்து தரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். இந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, சட்டசபையில் ஆணையத்தின் 608 பக்க அறிக்கை கடந்தமாதம் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல்...
இந்த ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அவர் மரணம் வரை தேதிவாரியாக நடந்தது என்ன என்பது குறித்தும் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் என்ன என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக ஜெயலலிதா மரணமடைந்த நாள் டிசம்பர் 5 அல்ல என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெயலலிதா டிசம்பர் 4, 2016 இல் காலமானார். ஆனால் அவரது இறப்பை அப்பல்லோ நிர்வாகம் ஒரு நாள் தாமதமாக வெளியிட்டுள்ளது. இது பல்வேறு விசாரணையில் தெரியவந்தது.
தீபக் கொடுத்த திதி
2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு அவருடைய அண்ணன் மகன் தீபக் டிசம்பர் 4 ஆம் தேதி திதி கொடுத்ததாகவும் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், டாக்டர் சிவக்குமார், சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இவர்களில் ஜெ ராதாகிருஷ்ணன், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஜெ.ராதாகிருஷ்ணன்
அந்த அறிக்கையில் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கூறியிருப்பதாவது, சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனின் சாட்சியானது புறக்கணிக்கும் வகையிலான பொறுப்பற்ற பதில் மிகவும் வருத்தமளிப்பதுடன் எதுவும் முறையாக இல்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. சிறந்த மற்றும் திறன்மிகு சிகிச்சைக்காக மறைந்த முதல்வரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என்ற அப்போதைய சுகாதாரத் துறை செயலாளரின் பதில் வியப்பில் ஆழ்த்தியது.
தன்முனைப்பு
தன்முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இதுவல்ல என்பதையும் மறைந்த முதல்வரை விரைந்து குணமடைவதைப் பற்றி மட்டுமே அனைவரும் அக்கறை கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதையும் இங்கு குறிப்பிடலாம். சுகாதாரத் துறை செயலாளரின் கூற்று சரியென எடுத்துக் கொண்டாலும் மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவர்கள் லண்டனிலிருந்தும் பிசயோதெரபிஸ்ட் சிங்கப்பூரிலிருந்தும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்திய மருத்துவர்கள்
இந்த நிலையில் இந்திய மருத்துவர்களின் தன்முனைப்பிற்கு அழுத்தமளிப்பதாக இல்லையா, அப்போதய சுகாதாரத் துறை செயலாளர் மறைந்த முதல்வருக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிப்பதை தவிர்ப்பதற்காகத்தான் இந்திய மருத்துவர்கள் அவமதிப்பு என்ற கருத்தை முன் வைத்தார். சுகாதாரத் துறை செயலாளரது கூற்றின் பொய்த் தன்மையை இது வெளிப்படுத்துவதுடன், இது போன்ற தகவல்கள் அப்போதே உடனுக்குடன் அரசிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தால் நோய்வாய்ப்பட்ட முதல்வரை மேற்கொண்டு உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய அரசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதுடன், சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்து அமைச்சரவையிலும் அரசால் பரிசீலிக்கப்பட்டிருக்கும். இங்கு சற்று சுவையான மற்றும் முரணாண செய்தி என்னவெனில் கால்நடை மருத்துவரான சுகாதாரத் துறை செயலாளர் தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என ஆணையம் தெரிவித்திருந்தது. ஆணையத்தின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.