"யானையையும் நரிகள் கொன்றுவிடும்" ஜெயலலிதா மரணம்.. திருக்குறளுடன் நறுக் என முடித்த ஆறுமுகசாமி
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் இடம் பெற்று திருக்குறள் கவனத்தை ஈர்த்து உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016இல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னும், சிகிச்சை பலனில்லாமல் அவர் டிச.5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா ஹெல்த் விஷயத்தில் மூடுமந்திரம் எதற்கு..? அன்றே அலர்ட் செய்த கருணாநிதி! அதிமுக அலட்சியம்!
ஆறுமுகசாமி ஆணையம்
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. பல முறை இந்த ஆணையம் நீட்டிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் சில வாரங்களுக்கு முன்பு விசாரணை அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ்நாடு அரசிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கை
இதையடுத்து இன்றைய தினம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டசபையிலும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா உள்ளிட்ட 4 பேரைக் குற்றம் செய்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. அதாவது சசிகலா. கேஎஸ் சிவக்குமார், சி விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
சுமுகமான உறவு இல்லை
கடந்த 2012ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜெயலலிதா மற்றும் சசிகலா இடையே சுமுகமான உறவு இல்லை என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டு உள்ளதாகவும் ஜெயலலிதா எப்போது வேண்டுமென்றாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் பொய்யான அறிக்கைகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.
எய்ம்ஸ் அறிக்கை
குறிப்பாக எய்ம்ஸ் அறிக்கையை ஏற்க மறுத்த ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை என்றும் ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு உள்ளதாகவும் கூறி உள்ளது. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் ஜெயலலிதாவைக் காப்பாற்றி இருகாலம் என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள திருக்குறள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
திருக்குறள்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கடைசி பக்கத்தில், உலகப் பொதுமறையாம் பொய்யாமொழிப் புலவரின் இருவரிகளை இங்குப் பொருத்தமான மேற்கோள்களாக ஆணையம் கருதி நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்ட இரு திருக்குறள்களை ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி மேற்கொள் காட்டியுள்ளார். குறிப்பாக அவர் மேற்கொள் காட்டியுள்ள இரண்டாவது திருக்குறள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறள் 1
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
அதிகாரம் 95 மருத்துவம் குறள் 948
உரை: நோய் என்ன? நோய்யின் காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)
குறள் 2
காலாழ் களரில் நரியிடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
அதிகாரம் 50 இடனறிதல் குறள் 500
வேல் ஏந்திய வீரரைக் கோர்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்