"இடிக்குதே".. ஸ்டாலினின் சுறுசுறுப்பும், அண்ணாமலையின் எழுச்சியும்.. பூங்குன்றன் ஏன் இப்படி சொல்றாரு?
முதல்வர் ஸ்டாலினை பூங்குன்றன் மனதார பாராட்டி உள்ளார்
சென்னை: மழை வெள்ளத்திலும், பெருந்தொற்று காலத்திலும், மக்கள் கேள்விகளுக்கு அஞ்சாமல் வயதையும் பாராமல் சென்னையைச் சுற்றி வந்த முதலமைச்சரை பாராட்டுவதே அறம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்... உதவியாளராக மட்டுமல்லாமல் அதிகாரமிக்கவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தவர்.. போயஸ் தோட்டத்தில் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்தவர்..!
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளே எங்கிருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒதுங்கிவிட்டார்.. மவுனமாகிவிட்டார்.. கோயில் குளம் என்று சுத்த ஆரம்பித்துவிட்டார்.. எப்போதாவது அவரை பற்றின செய்திகள் மட்டும் மீடியாவில் வந்துவிட்டு போகும்.
30ஆயிரம் கொடுக்கனும்னு சொன்னீங்க? இப்போ என்ன 20ஆயிரம்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கிடுக்கிப்பிடி
அதிமுக
தற்போதைய சூழலில், அதிமுகவுக்குள் புகைச்சல் ஓடி கொண்டிருக்கிறது.. ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா இடையே அதிகார போட்டியும் வெடித்து கிளம்பி வருகிறது.. இவ்வளவு நடந்தும்கூட அதை பற்றி ஒரு வார்த்தைகூட கருத்து சொல்லாமல் இருந்து வருகிறார் பூங்குன்றன்.. ஆனால், திடீரென அண்ணாமலையை புகழ்ந்து பேசி உள்ளதுதான் பெருத்த சந்தேகத்தை கிளப்பி வருகிறது.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் பாராட்டிஉள்ளார்.. அதற்கு ஒருபடி மேலே போய், முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி உள்ளார்.
அண்ணாமலை
இது தொடர்பாக பூங்குன்றன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அந்த பதிவு இதுதான்: "அண்ணா மலை, அண்ணாந்து பார்க்கின்ற மலை, அதைப் போலவே இன்று இந்த அண்ணா மலையையும் உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார். அண்ணாமலை அவர்களின் பேச்சு தொண்டர்களிடம் புதிய எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
அண்ணாமலை
தமிழகத்தில் அரசியலுக்கு வரும் புதியவர்களை பிரதமரின் ஆளுமையும், அண்ணாமலையின் தன்னம்பிக்கையும் ஈர்க்கும் என்பதே சத்தியம். காதலித்த பணியை கைவிட்டு, மக்கள் பணியை காதலிக்கத் தொடங்கியிருக்கும் திரு அண்ணாமலைக்கு எனது பாராட்டுக்கள்.
எதிர்க்கட்சிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தலைமையிடம் இன்று எதிர்பார்ப்பது புரட்சித்தலைவரின் சாதுர்யத்தையும், புரட்சித்தலைவியின் வீரத்தையும் தான். எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டுமென்றால் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஆளும் கட்சிக்கும் மக்கள் பணியில் ஆசைவரும், நல்லதை செய்வதில் கவனம் வரும், போட்டிபோட்டு செய்ய உற்சாகம் பிறக்கும். இன்று எதிர்க்கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சென்னையில் மழை வெள்ளத்தில் சென்று உதவிகளை செய்து வருகிறார்கள். மகிழ்ச்சி.
முதல்வர்
மழை வெள்ளத்திலும், பெருந்தொற்று காலத்திலும், மக்கள் கேள்விகளுக்கு அஞ்சாமல் வயதையும் பாராமல் சென்னையைச் சுற்றி வந்த முதலமைச்சரை பாராட்டுவதே அறம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் மனதை நாம் கவர வேண்டாமா? மாநகராட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கழகத்தின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற ஆசைப்படுபவர்கள் அசத்த வேண்டாமா? நீங்கள் செய்யும் பணியைப் பார்த்து ஆளும் கட்சி திகைக்க வேண்டாமா? உங்கள் செயல்பட்டைப் பார்த்து சரியான ஆள் இவர்தான் என்று மக்கள் நம்ப வேண்டாமா? ஆர்வமான தொண்டர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நிர்வாகிகள்
அவர்களை செயல்பட வைப்பது உங்களின் அன்பும், சொல்லும் தான். நீங்கள் காட்டும் திசையில் பயணிக்க காத்திருக்கும் அவர்களுக்கு சரியான பாதையை நீங்கள் தான் காட்ட வேண்டும். தொண்டர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது பயன்படுத்த நிர்வாகிகளுக்குத்தான் மனமில்லை என்பதும் புரிகிறது. அண்ணா மலை வளர்கிறது என்றால் யாரோ தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்! தொண்டர்களே! உற்சாகத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள், தன்னம்பிக்கைதான் பலம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். யாரையும் நம்பி நீங்கள் இல்லை. உங்களை நம்பித்தான் மற்றவர்கள்!
வேகம்
எனவே, உடன்பிறப்பே! கட்சியை வளர்க்க ஆசை கொள்ளுங்கள். புதியவர்களை கழகத்தில் சேர்க்க வேகம் கொள்ளுங்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி செய்யும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று முழங்கிய இதயதெய்வங்களின் வார்த்தைகளுக்கு புகழ் சேருங்கள். பேரறிஞர் காட்டிய பாதையில், புரட்சித்தலைவரின் அடிச்சுவட்டில், அம்மாவின் வீரத்தோடு சிங்கமென மக்கள் பணியாற்றப் புறப்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.