"காய் நகர்த்தல்".. விதை ஜெயலலிதா போட்டது.. ஸ்டாலினும் விடவில்லை.. பேரறிவாளன் விடுதலையில் சபாஷ்!
ஜெயலலிதா போட்ட விதைதான், இன்றைய பேரறிவாளன் விடுதலைக்கு காரணம்
சென்னை: பேரறிவாளனின் விடுதலைக்கு காரணம் யார்? திமுகவா? அதிமுகவா? என்ற வாதம் சோஷியல் மீடியாவில் துவங்கி உள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை திமுகவினர் தங்களது வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்குக் காரணம் உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு கடும் கொட்டுக்கள் விழுந்துள்ளதால். அதேசமயம், பேரறிவாளன் விடுதலைக்கான முதல் விதையைப் போட்டவர் மறைந்த ஜெயலலிதாதான்.
கடந்த 2014ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதோடு இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ரத்தம் வடியும் பேரறிவாளனின் திறந்த மடல்: ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ கஸ்டடியில் எத்தனை சித்ரவதைகள்?
ஜெயலலிதா
இதைத் தொடர்ந்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஜெயலலிதா முடிவெடுத்தார். இதுகுறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து வராவிட்டால் 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அறிவித்தார்... அப்போது மத்தியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி முறையிட்டது... 7 தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என்று வாதிட்டது.
Recommended Video
நீதிபதிகள்
மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அது வாதம் செய்தது.. இதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது, மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டது. அதேசமயம், அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்வதாக இருந்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
சட்ட சிக்கல்கள்
இதன் மூலம் 161வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசே 7 பேரையும் விடுவிக்கலாம் என்ற நிலை உருவானது. ஆனால் அது நடக்கவில்லை. அடுத்தடுத்து பல்வேறு சட்டச் சிக்கல்கள் உருவாகி வந்தன. 2016ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தது.. முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவரை அற்புதம் அம்மாள் நேரில் சந்தித்து தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்... ஜெயலலிதாவும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தீவிர அக்கறை காட்டி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் மரணமடைந்தார்.
ஆளுநர்
அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின்போது, 2018ம் ஆண்டு தமிழக சட்டசபையில் 7 தமிழரை விடுதலை செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினர்... பின்னர் இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது... அந்த தீர்மானத்தைத்தான் இத்தனை காலமாக ஆளுநர் மாளிகை முடிவெடுக்காமல் அலைக்கழித்து வந்தது... இதைத் தொடர்ந்துதான் பேரறிவாவளன் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அதில்தான் அவருக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது.
துணிச்சல்
"ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றிதான் பேரறிவாளன் விடுதலை.. ஜெயலலிதா போராட்டத்தை முன்னெடுத்ததன் நிறைவாக பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது" என்று ஓபிஎஸ் - எடப்பாடி இருவருமே கூட்டாக அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
தாய்மை
ஜெயலலிதா காலத்தில்தான் பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முனைப்புடன் தொடங்கின.. ஆளுநரால் அது தாமதப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக அரசின் முன்னெடுப்புகளால் உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பைத் தந்து அற்புதம் அம்மாளின் தாய்மையை வெல்ல வைத்துள்ளது...!