இலக்கை நோக்கி பயணித்தால் போதும்..கோட்டை கொத்தளத்தில்..டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்
சென்னை: அன்று நான் 5 வகுப்பு பள்ளி மாணவன். இன்று 2022 காவலர்களை வழிநடத்தும் தலைமைக் காவலன். இலக்கை நோக்கி பயணித்தால் போதும் என்று கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொடி ஏற்றிய போது முதல்வர் ஸ்டாலின் உடன் இருந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
நாடு விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று முன்னர் சென்னை ராஜதானியாக இருந்த சென்னை மாகாணத்தின் தலைமை ஆட்சிப்பீடமாக இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் 'ஜாக்' கொடி இறக்கப்பட்டு, கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதன்முதலாக நம் தாய்த்திரு நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின். இந்தியா 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், 1974ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதல்வர்கள் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், மாநில சுயாட்சியின் தீவிர ஆதரித்த கருணாநிதி.
தேசியக் கொடி ஏற்றும் உரிமை: முதலமைச்சர்களுக்குப் பெற்றுக் கொடுத்த கருணாநிதி! - போராட்டப் பின்னணி
76வது சுதந்திர தினம்
இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் தேசிய கொடியை ஏற்றினர்.
கருணாநிதி
குடியரசுத் தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போது மாநில தலைநகரங்களில் கொடி ஏற்றும் உரிமை மாநில ஆளுநர்களிடம்தான் 1973 வரை இருந்தது. மாநில முதல்வர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள.. ஆளுநர்தான் கொடி ஏற்றி வந்தார். ஆனால் இந்த வழக்கத்தை எதிர்த்தது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். 1974ம் ஆண்டு குடியரசுத் தினம் வந்தது. அப்போது ஆளுநராக இருந்த கேதர்தாஸ் காளிதாஸ் ஷா புதிய ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றினார்.
முதல்வருக்கு கொடி ஏற்றும் உரிமை
மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் கொடி ஏற்றாத போது ஆளுநர் கொடி ஏற்றுவதை முதல்வர் கருணாநிதி அப்போது விரும்பவில்லை. குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் தானே செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் இல்லையே? அதேபோல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் தானே தேசிய கோடி ஏற்ற வேண்டும். ஆளுநர் ஏன் ஏற்ற வேண்டும், என்று முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்தார்.
1974 ஆகஸ்ட் 15
இதற்காக பல்வேறு அறிக்கைகள், கடிதங்கள் என்று தொடர்ந்து அப்போது கருணாநிதி போராடி வந்தார்.இதற்காக 1974ல் இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார். முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் இந்திரா காந்தி அந்த உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கினார். இதன் காரணமாக 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கருணாநிதி கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார்.அதே வருடம் நாடு முழுக்க மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றினார்கள்.
அதே இடம் அதே புகைப்படம்
அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அப்போதய முதல்வர் கருணாநிதி கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிவிட்டு படியில் இறங்கி வந்த புகைப்படம் தேசிய அளவில் கவனம் பெற்றது. வெள்ளை உடையில்.. பின்னால் காவல்துறை உயரதிகாரிகள் வர கருணாநிதி கொடி ஏற்றிவிட்டு நடந்து வருவார். கையில் தனது துண்டை பிடித்தபடி அவர் நடந்த வந்த புகைப்படம் மிகவும் பிரபலம். அதே இடத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் கொடி ஏற்றிவிட்டு நடந்து வந்தார். உடன் டிஜிபி சைலேந்திரபாபுவும் நடந்து வந்தார்.
முதல்வர் ஸ்டாலின் ஏற்றிய கொடி
இரண்டும் ஒரே மாதிரி இருப்பதாக திமுகவினர் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின், இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்! தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, #IndiaAt75-ல் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்!, என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஜிபி சைலேந்திரபாபு
இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு தனது முகநூல் பக்கத்தில் அந்த புகைப்படத்தினை பகிர்ந்து முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய போது நான் 5ஆம் வகுப்பு மாணவன். இன்று 2022 காவலர்களை வழிநடத்தும் தலைமைக் காவலன். இலக்கை நோக்கி பயணித்தால் போதும் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.