5 ஆண்டுகள் ஓடிவிட்டன.. கருணாநிதி நினைவு தினம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் அமைதிப் பேரணி
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவருமாக திகழ்ந்தவர் கருணாநிதி. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்று போற்றப்படும் இவர் 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டு இருக்கிறது அரசு. இந்த நிலையில் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் காலமானார்.
அவர் மறைந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை திமுகவினர் கடைபிடிக்க உள்ளார்கள். தலைநகர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்து உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இருக்கும் கருணாநிதியின் சிலையில் இருந்து திமுகவினர் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புறப்பட்டு செல்லும். இந்த பேரணி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி செல்லும் அங்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் மலரஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு மற்றும் சிஐடி காலனியில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.












Click it and Unblock the Notifications