கள்ளக்குறிச்சி மாணவி மர்மமரணம்.. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 3 பேர், 2 ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கி இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. இது கலவரமானது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்கார்கள் பொருட்களை சூறையாடி வாகனங்களை சேதப்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் - கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!
பள்ளி நிர்வாகிகள்-ஆசிரியர்கள் கைது
இதற்கிடையே மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு
இந்நிலையில் தான் கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுவை விழுப்புரம் மகளிர். சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.
நீதிபதி விசாரணை
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்கள் தரப்பில், மாணவியின் உடல் இரண்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை. மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் தரப்பில், தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார். மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.
ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்
அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி ,மாணவியை படி என்று சொன்னதாலேயே தற்கொலை செய்து கொண்டார் என்றும்,இது பாலியல் வன்கொடுமையோ,கொலையோ கிடையாது என்றும் மாணவி மரணத்தால் ஏற்பட்ட கலவரத்தில் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முதலில் இந்த வழக்கு சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டதாகவும், சிபிசிஜடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மாணவியின் தற்கொலை கடிதத்தையும் சுட்டி காட்டினார். தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும், சாட்சிகள் கலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் ,மேலும் பள்ளித் தாளாளர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு தொடரப்பட்ட அதில் அவர் விடுதலையாகி உள்ளார் என்றும் தெரிவித்தார். இதே பள்ளியில் ஏற்கனவே இரண்டு தற்கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் வாதிட்டார். ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளில் எந்த முரண்பாடும் இல்லை என்று ஜிப்மர் மருத்துவமனை நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இது பாலியல் வன்கொடுமையோ,கொலையோ இல்லை என்றாலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் கொலை வழக்காக மாற்ற தயங்க மாட்டோம் என்றும் வாதிட்டார்.
மாணவி தரப்பு வாதம்
மாணவியின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு, முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரண்டாவது பிரதே பரிசோதனை அறிக்கைக்கு முரண்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் பள்ளி தாளாளரின் மகன்கள் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
5 பேருக்கும் ஜாமீன்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். இதனால் அவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாக உள்ளனர்.