ஸ்டாலினும் கமலும் ஆளுங்கட்சிக்கு எதிராக எம்ஜிஆர் பாடலை பாடுவதை விட சொந்த பாடலை பாடலாமே- நெட்டிசன்கள்
எம்ஜிஆர் மறைந்து 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் பாடல்கள் மூலமும் வசனங்கள் மூலமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு உதாரணம் எதிர்கட்சியினரும் அவரது பாடல்களை பாடி பிரச்சாரம் செய்வதுதான்.
சென்னை: எம்ஜிஆர் பாடல்களைப் பாடி ஓட்டு கேட்பது அதிமுகவினரின் ஸ்டைல் மட்டுமல்ல... அதிமுகவினரை திட்டுவதற்கும் தாக்கி பிரச்சாரம் செய்வதற்கும் கூட எதிர்கட்சியினர் எம்ஜிஆர் பாடல்களைத்தான் பயன்படுத்துகின்றனர். "சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..." என்று எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆர் பாடிய பாடல்களைப் பாடினார் மு.க ஸ்டாலின். அதே பாடலை ட்விட்டரில் பதிவிட்டு ஆளும் அரசை தாக்கியுள்ளார் கமல்ஹாசன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் எம்ஜிஆர் பாடல்களைப் பாடி ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதை விட சொந்த படத்தில் இருந்து பாடலாமே என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
தமிழகத்தை மீட்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், சீரமைப்போம் தமிழகத்தை என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி..அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி..என்ற எம்.ஜி.ஆர். பட பாடலை பாடினார். அன்னக்கொடியை காக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று தெரிவித்தார்.
போகும் இடமெங்கும் எம்.ஜி.ஆர். பட பாடல்களை சொல்லி, அதிமுக ஆட்சியை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேரடியாக எம்ஜிஆருடன் பழகியவன் என்றும் கூறி வருகிறார் கமல்ஹாசன்.
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கமல்ஹாசன் மீது கடும் தாக்குதல் நடத்தினார். 70 வயதில் பிக்பாஸ் நடத்தி குடும்பத்தை கெடுக்கிறார் என்று காட்டமாக பேசினார் முதல்வர் பழனிச்சாமி. அவரது படத்தில் உள்ள பாடல்களில் ஏதாவது நல்ல கருத்துக்கள் இருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்ட கமல் அடுத்ததாக ஒரு எம்ஜிஆர் பாடலை பதிவிட்டார்.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்ற எம்.ஜி.ஆர். பாடலை சொல்லிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார்.
கமல்ஹாசன் சொல்லுவதற்கு முன்னதாகவே நேற்றைய தினம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் பேசிய மு.க ஸ்டாலின், சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் என்ற பாடலை பாடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்திருந்தார். எம்ஜிஆர் பாடிய பாடலை ஒரே நாளில் இரு தலைவர்களும் பாடி வைரலாக்கினர்.
எம்ஜிஆரை அதிமுக மட்டுமே சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் இப்போது எதிர்கட்சியினரும் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் தலைவர் கருணாநிதி எழுதிய வசனங்களை உதாரணமாக கூறாலாமே என்று அதிமுகவினர் கேட்கின்றனர்.
அதே போல மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது படத்தில் உள்ள நல்ல பாடல்களை கருத்துள்ள பாடல்களை பாடலாமே எங்கே பாடுங்கள் பார்ப்போம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.