தமிழகத்தில் தொங்கு சட்டசபை வந்தால்.. மறுபடியும் தேர்தல்தான்.. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்!
சென்னை: தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எங்கள் முடிவு என்னவாக இருக்கும் என்றால் இரு மோசமான நபர்களை தேர்வு செய்வதை விட மறுபடியும் தேர்தல் நடத்த வழி செய்வோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என நான் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.
அதுதான் எங்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு. தேர்தலில் என்ன நடந்தாலும் மக்கள் நீதி மய்யத்தை அரசியல் வரைபடத்தில் இருந்து நீக்கிவிட முடியாது. இதுதான் எங்கள் வாழ்க்கையில் முதல் 3 ஆண்டுகளில் இருக்க வேண்டிய மிக முக்கியமான இடம்.
இரு கட்சிகள்
தமிழக அரசியலில் உள்ள முக்கிய இரு கட்சிகளுமே எங்களுக்கு எதிரிகள்தான். ஒரு கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது. மற்றொன்று ஆட்சியில் இல்லை. அதில் ஒன்று விஷப்பாம்பு, அதற்கு இப்போது தலையில்லை, வால் இருக்கிறது. மற்றொரு கட்சியும் இந்த கட்சிக்கு சமமானதாகவே இருக்கிறது. அந்த கட்சிக்கு தலை இருக்கிறது. ஆனால் அது உயிருள்ள உதைக்கக் கூடிய விஷம் கொண்ட விலங்கு.
கட்சி நடத்த உதவுவது எது
அவர்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். எங்கள் கட்சியில் போட்டியிடுபவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்ல. இதற்கு முன்பு சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை இதில் பயன்படுத்துகிறோம். நான் வேலை செய்து பணத்தை பெறுகிறேன். அது கட்சி நடத்த உதவுகிறது. அனைத்தையும் நான் இதற்கு செலவு செய்து இருக்கிறேன்.
சவாலான விஷயம்
அரசியலில் செயல்படுவது என்பது சவாலான விஷயம் ஆகும். சினிமாவில் சாதித்துவிட்டேன். அரசியலிலும் சாதிப்பேன். கோவையில் எனக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எங்கள் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொருத்தவரை நாங்கள் மற்றொரு தேர்தலை மக்கள் மீது திணிக்க விரும்ப மாட்டோம்.
மறுதேர்தல்
ஆனால் இரு மோசமான கட்சிகளில் ஒன்றை தேர்வு செய்வதற்கு பதிலாக மற்றொரு தேர்தலை இழுத்து செல்வதை நாங்கள் செய்வோம். எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வர் என்றால் நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார் கமல்ஹாசன்.