தேமுதிக, ஐஜேகேவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை.. நாங்கள் நடத்தவே இல்லை.. கமல்ஹாசன் மறுப்பு
சென்னை: தேமுதிக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுன் நான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசனுடன் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.
எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள், மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள், தகுதி உடையவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட மனு கொடுக்கலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ. 10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு செய்வோம். தேமுதிக, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சில பேர் எங்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.
நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.