"யாரென்று தெரிகிறதா.." விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி.. புட்டு புட்டு வைத்த சர்வே!
சென்னை: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் ஒரு விஷயம் மிகத் தெளிவாக தெரிகிறது. திமுக வெற்றி பெறும் என்பதை தாண்டி.. அதிமுக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதையும் தாண்டி.. பலரும் எதிர்பார்க்காத ஒரு கட்சி மூன்றாவது இடத்துக்கு வந்து உள்ளது என்பது தான் அதிலிருந்து கிடைக்கும் தகவல்.
ஆம் .. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை இந்த கருத்துக் கணிப்பு புட்டு புட்டு வைக்கிறது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாக களத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
திமுக, அதிமுக
இதில் திமுக கூட்டணிக்கு 151 முதல் 158 இடங்கள் வரை கிடைக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 77 முதல் 83 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது பற்றிய ஒரு பிம்பம் இந்த கருத்துக்கணிப்பில் மூலம் உருவாகி உள்ளது.
விஸ்வரூபம்
அதே நேரம், இந்த இரண்டு கட்சிகளையும் தாண்டி தமிழகத்தில் மூன்றாவது ஒரு கட்சி மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி இனிவரும் காலங்களில் தமிழக அரசியலை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது சக்தியாக உருவெடுத்து விட்டது என்பதை அடித்துச் சொல்கிறது இந்த கருத்துக்கணிப்பு.
சென்னை மண்டலம்
சென்னை மண்டலத்தில் 18 தொகுதிகள் உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை மண்டலத்தில் ஓரளவு செல்வாக்குடன் இருக்கிறது. அந்தக் கட்சிக்கு 8.42 சதவீதம் பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சிக்கு 4.46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்கின்றனர். தெற்கு மண்டலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் வருகின்றன. இங்கு மக்கள் நீதி மய்யம் 6.40 சதவீதம் வாக்குகளை பெறும். நாம் தமிழர் கட்சி 7.61 சதவீதம் வாக்குகளை பெறும். இவ்வாறு அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலங்களில் 36 தொகுதிகள் வருகின்றன. இங்கு மக்கள் நீதி மய்யம் 4 சதவீதத்துக்கும் மேலும், நாம் தமிழர் கட்சி 5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலம்
மேற்கு மண்டலம், பகுதியில் 42 தொகுதிகள் வருகின்றன. புதிய தலைமுறை கருத்துக் கணிப்பின்படி மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த மண்டலத்தில் தான் பிற மண்டலங்களை விட அதிக வாக்குகளை பெறும் என்று சொல்கிறது இந்த கருத்துக்கணிப்பு. அதாவது 9.26 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பெறும். நாம் தமிழர் கட்சி 3.44 சதவீதம் வாக்குகளை பெறும்.
மூத்த கட்சி
தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும் மூத்த கட்சி நாம் தமிழர். மூன்றாவது சக்தியாக உருவெடுக்கும் என்று நம்பப்பட்ட கட்சி. கணிசமான வாக்குகளை பெற்ற போதிலும் கூட எம்எல்ஏக்களை பெறுவதில் அந்த கட்சி தடுமாறி வருகிறது. மேலும் சமீபத்தில் அந்த கட்சியில் உள்ள சில முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது சீமான் தீவிரமாக களமாடி கொண்டிருக்கிறார் .
கமல்ஹாசன் அரசியல்
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சியை விடவும் பெரிய அளவுக்கு முன்னேறி வந்து கொண்டு இருக்கிறது. தென் மண்டலம், மத்திய மண்டலங்களில் மட்டும் நாம் தமிழர், ம.நீ.மவைவிட முன்னிலையில் இருக்கிறது. வடக்கே இருவரும் ஒரே மாதிரிதான். சென்னையில் ம.நீ.மதான் லீடிங். நாம் தமிழருக்கு சீமான் எப்படியோ இங்கே கமல்ஹாசன் அப்படி. தனி பிம்பமாக தெரிகிறார். இவரை சுற்றி தான் அந்த கட்சி பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கூடும் செல்வாக்கு
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தீவிர பரப்புரை ஆரம்பித்துள்ளார். இந்த மாற்றங்கள் அனைத்தும் இந்த கருத்துகணிப்பு நடைபெற்ற பிறகு ஆரம்பித்துள்ளன . எனவே தேர்தல் நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேலும் கூடுதலாக வாக்கு சதவீதம் கிடைக்குமே தவிர குறையாது என்கிறார்கள் இந்த கருத்து கணிப்பை பார்க்கும் அரசியல் பார்வையாளர்கள்.