"டர்னிங் பாயிண்ட்".. தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்ட பாஜக.. சூப்பராக ஸ்கோர் செய்த கமல்!
பாஜகவினருக்கு கமல் சரியான பதிலடியை கோவையில் தந்துள்ளார்
சென்னை: இருக்கிற 234 தொகுதிகளில் கோவை தெற்குதான் இப்போது செம ஹாட்டாக இருக்கிறது. செம பரபரப்பாக இருக்கிறது.. அதுக்கு காரணம் திணறி கொண்டிருக்கும் பாஜக.. திமிறி மேலே வந்து கொண்டிருக்கும் மய்யம்..!
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை ஸ்டார் அந்தஸ்து தொகுதி.. கமலும் சரி, வானதியும் சரி இருவருமே பலசாலிகள்.. இருவருமே திறமைசாலிகள்.. இருவருமே பிரபலமானவர்கள்..!
ஆனால், இவர்கள் இருவருக்குமே ஆளுக்கு ஒரு மைனஸ் இருக்கிறது.. வானதிக்கு இருக்கும், அரசியல் செல்வாக்கு கமலுக்கு இல்லை.. மேலும் இது அவருக்கு முதல் தேர்தல்..
வேட்பாளர்கள்
அதிக வாக்கு வங்கிகளை கொண்ட 2 மாநில கட்சிகளை பின்புலமாகக் கொண்டு களமிறங்கியுள்ள 2 தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவது, மற்றும் திராவிட கட்சிகளுக்கு நிகராக கீழ்மட்ட அளவுக்கு இறங்கி மக்களிடம் முழுமையாக வாக்கு சேகரிக்க முடியாதது போன்றவை கமலுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது... இருந்தாலும் தன் லெவலில் நின்று ஓட்டு சேகரித்தாலும் பெருவாரியான வாக்குகளை மெல்ல மெல்ல ஈர்த்து வருகிறார் கமல் என்ற பெயர் சில தினங்களாகவே ஏற்பட்டு வருகிறது.
சாதனைகள்
அதேபோல, வானதியை எடுத்து கொண்டால், அவருக்கு அரசியல் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தாலும், அதை முந்தி கொண்டு வந்து நிற்கிறது பாஜகவின் அதிருப்திகள்.. பாஜகவின் எந்த சாதனையையும் அவரால் சொல்லி ஓட்டு கேட்க முடியாத நிலை உள்ளது.. மோடி, அமித்ஷா படங்களை காட்டி வாக்கு சேகரிக்க நிலைமை உள்ளது... உள்ளூரில் ராதாரவி, நமீதா போன்றவர்கள் போதாது என்று வடமாநில தலைவர்களை அழைத்து வந்து வாக்கு கேட்கும் நிலைமையில் உள்ளது தமிழக பாஜக.
யோகி
அப்படித்தான் நேற்று, உபி முதல்வர் யோகி வந்தார்.. இவ்வளவு நாள் தமிழ்நாட்டில் பிரச்சாரங்களில் எந்த ஒரு சின்ன பிரச்சனையும், வன்முறையும் நடக்காத நிலையில், நேற்றுதான் முதன்முறையாக கோவையில் வன்முறை வெடித்தது.. இவர்கள் ஊர்வலம் செல்கிறார்கள் என்பதற்காக கடைகளை அடைக்க சொல்லி பாஜகவினர் பிரச்சனை செய்திருக்கிறார்கள்.. சில கடைகள் மீது கல்லெறிந்து உள்ளனர்.. அந்த வகையில் ஒரு செருப்பு கடை தாக்குதலுக்குள்ளானது. ஒருநாள் யோகி வந்துபோனதுக்கே கோவை தெற்கு திணறிவிட்டது.
செருப்பு கடை
இது பாஜகவுக்கு மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. ஒட்டுமொத்த கோவையும் பாஜகவுக்கு எதிராக திரும்பி விட்டது போன்ற சூழல் உருவாகியுள்ளது. தற்போது கமல் இதை கையில் எடுத்து அதிரடி காட்டி விட்டார். டக்கென அந்த செருப்பு கடைக்கு கிளம்பி சென்றார் கமல்.. அந்த கடைக்குச் சென்று கமல் ஓனரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அதே கடையில் தனக்கு ஒரு புது செருப்பு வாங்கி கொண்டு வந்துள்ளார்.. இதுவும் ஒருவகை அரசியல் என்றாலும், அதை சமயோஜிதமாக யோசித்து உரிய நேரத்தில் செய்து, சபாஷ் வாங்கிவிட்டார் கமல்..
பழக்கூடை
இப்படித்தான் கமலுக்கு அன்று உடம்பு சரியில்லை என்றதும், பழக்கூடையை வாங்கி வானதி வாழ்த்து சொன்னாரே, அதுவும் அரசியல்தான்.. ஆனால் அந்த அரசியலுக்கும், இந்த செருப்புக்கடை அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது.. அர்த்தம் நிறைய உள்ளது.. நம் வாழ்த்தோ செயலோ, அடுத்தவர்களின் உயர்வுக்கும் பாலமாக இருப்பதுதான் இதன் நூலிழை வித்தியாசம். அதைதான் கமல் தொட்டிருக்கிறார்..!
செல்வாக்கு
ஏற்கனவே கமலுக்கு செல்வாக்கு தொகுதியில் கூடி வரும் நிலையில், இந்த செருப்பு விவகாரத்திலும் கிரேஸ் உயர்ந்துதான் வருகிறது...நேற்றைய யோகி வருகைக்குப் பிறகு தற்போது கமல் அலை கோவை தெற்கில் பலமாக வீச ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யோகியைக் கூட்டி வந்து தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொண்டுள்ளது பாஜக என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.