கனல் கண்ணன் கைது..இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரிகிறார்களே?.. எச்.ராஜா ஆவேசம்
சென்னை:கனல் கண்ணனின் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்?என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது..
அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது
கனல் கண்ணன் பேச்சு
ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
போலீசில் புகார்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.. இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது, கலகம் செய்யத் தூண்டுதல் , அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
தமிழக பாஜக தலைவர்கள், கனல் கண்ணன் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எச். ராஜா ஆதரவு
மூத்த தலைவர் எச்.ராஜா, கனல் கண்ணனுக்கு ஆதரவு தந்ததுடன், ட்வீட் போட்டு கடுமையான கண்டனத்தை திமுக அரசுக்கு விடுத்துள்ளார்.. சிவபெருமானை இழிவுபடுத்திய யூ டியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய துணிச்சலற்ற காவல்துறை, கனல் கண்ணனை கைது செய்யலாமா? கடவுளை இழிவு படுத்தலாம் என்றால் மனிதனை பற்றி பேசியது தவறா? இதற்கு தமிழக இந்து விரோத காவல் (ஏவல்) துறையின் பதிலென்ன என்று கேள்வி எழுப்பினார்.
பேசியது தவறில்லை
கனல் கண்ணன், கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியது தவறில்லை. இதற்கு முன் சோ.ராமசாமி கூட பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பேசியுள்ளார். ஒருசிலரின் தூண்டுதலுக்காக காவல்துறை ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்படக் கூடாது என்றும் தெரிவித்தார் எச். ராஜா.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் கனல் கண்ணன் எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கனல் கண்ணன் கைது
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை தேடி வந்த நிலையில் புதுவையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரம் மறுப்பு
இதனிடையே கனல் கண்ணனின் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்?என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாசிச, இந்து விரோத சக்திகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.