விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்- பிரியாணி கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்ற சிவகாஞ்சி போலீஸ்
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பிரியாணி கடைகளை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சிவகாஞ்சி போலீசார் இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து இந்துத்துவ அமைப்புகள் ஊர்வலம் நடத்து வழக்கம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது பதற்றங்களை இந்த அமைப்பினர் ஏற்படுத்துவம் வாடிக்கை.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரப் போகுது! பிரியாணி கடைகளை மூடுங்க! காஞ்சிபுரத்தில் பறந்த ஆர்டர்!
விநாயகர் சிலை ஊர்வலம்
ஆகையால் தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை தெருக்களில் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. தமிழ்நாட்டில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்குப் போட்டியாக பெரியார் கைத்தடி ஊர்வலம், பெரியார் சிலை ஊர்வலங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் இத்தகைய விநாயகர் சிலை ஊர்வலங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
காஞ்சி போலீஸ் உத்தரவு
இந்நிலையில் காஞ்சிபுரம், சங்கரமடம் அமைந்துள்ள சிவகாஞ்சி பகுதி போலீசார் பிறப்பித்த உத்தரவு ஒன்று பெரும் சர்ச்சையானது. அதாவது, சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகிற 31-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதாலும், செப்டம்பர் 2,4 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. எனவே செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இருதினங்களுக்கு தங்களது கடையை மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டு கொள்கிறோம் என்பதுதான் அந்த உத்தரவு.
போலீஸ் உத்தரவுக்கு எதிர்ப்பு
சிவகாஞ்சி போலீசாரின் இந்த உத்தரவுக்கு நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவைகளும் பெரியார் இயக்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது; பின்னர் ஆம்பூர் பிரியாணி திருவிழாவே ரத்து செய்யப்பட்டது என்கிற சர்ச்சையின் தொடர்ச்சியாக சிவகாஞ்சி போலீஸ் உத்தரவு வெடித்தது.
போலீஸ் உத்தரவு வாபஸ்
தற்போது சிவகாஞ்சி போலீசார் இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் அருள்மொழி கூறுகையில், காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் நேற்று வழங்கிய விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்திற்காக பிரியாணி கடைகளை மூடக்கோரிய அறிவிப்பு நேற்றே திரும்பப் பெறப்பட்டதாகவும் அவ்வாறு எந்த உத்தரவும் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்றும் சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி அவர்கள் எடுத்த முயற்சிக்கு நன்றியும் பாராட்டும்! என தெரிவித்துள்ளார்.