என்னங்க இது? கடுப்பான கார்த்தி சிதம்பரம்.. 2 பக்க கடிதம்! 2 வரியில் பதிலளித்த மத்திய அமைச்சர்
சென்னை: உக்ரைனிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து தான் எழுதிய 2 பக்க கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இரண்டே வரிகளில் பதிலளித்ததால் கார்த்தி சிதம்பரம் அதிருப்தியடைந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். குறிப்பாக மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர்.
தங்களுக்கு உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்பதற்காக சென்ற மாணவர்களின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மத்திய மாநில அரசுகளிடம் உருக்கமான கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

ஆபரேஷன் கங்கா
இந்திய அரசும் ஆபரேசன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் இருந்து தப்பி அண்டை நாடுகளுக்கு வந்த இந்திய மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.

இருவர் உயிரிழப்பு
தாக்குதல் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கார்கீவ் நகரிலிருந்து உணவு வாங்குவதற்காக பதுங்கு குழியில் இருந்து வெளியே சென்ற கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா ஞானகவுடர் மார்ச் 1 ஆம் தேதி ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவை சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமிழ்நாடு மாணவர்கள்
இதனிடையே, உக்ரைனில் சிக்கி இருக்கும் தமிழ்நாடு மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனை அடுத்து உக்ரைனிலிருந்து ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற தமிழக மாணவர்களும் பல்வேறு குழுக்களாக விமானங்களில் அழைத்து வரப்பட்டனர்.

கார்த்தி சிதம்பரம்
இந்த நிலையில் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து மத்திய அரசு முடிவேதும் எடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதிய கார்த்தி சிதம்பரம், "உக்ரைனிலிருந்து திரும்பிய தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இந்திய மருத்துவத்துறையின் எதிர்கால போராளிகள்." என்று குறிப்பிட்டு 2 பக்க கடிதம் எழுதி இருந்தார்.

2 வரியில் பதில்
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மருத்துவ மாணவர்கள் தொடர்பாக ஆகஸ்டு 3 ஆம் தேதி தேதியிட்ட உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது." என இரண்டே வரியில் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். இதனை ட்விட்டரில் பதிவிட்ட கார்த்தி சிதம்பரம், "மத்திய அமைச்சர் தீர்வை தெரிவிக்க தவறிவிட்டார்." என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications