பேனா நினைவு சின்னம்.. இந்தி வர்ணனை, கர்நாடக இசைக்கான வீணை வடிவம் ஏன்? கொதித்த ஆம்ஆத்மி! ஒரே களேபரம்
கடலில் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க ஆம்ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லிவிட்டு கர்நாடக இசையை நினைவுப்படுத்தும் வீணை வடிவமும், நினைவு சின்னம் பற்றிய வர்ணனையில்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இது கேளபரமாக மாறிய நிலையில் ஆம்ஆத்மி கட்சியும் பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் எனக்கூறிவிட்டு கடற்கரைக்கும், நினைவு சின்னத்துக்கும் இடையேயான 350 மீட்டர் பாலம் கர்நாடக இசையை நினைவுப்படுத்தும் வகையில் வீணை வடிவில் ஏன் அமைக்கப்படுகிறது? தமிழ் ஆங்கிலம் மட்டுமின்றி நினைவு சின்னம் பற்றி வர்ணனையில் இந்தியையும் சேர்த்துள்ளனர்? இது யாரை திருப்திப்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியது விவாதத்தை கிளப்பியது.
சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடலுக்குள் 8,551.13 சதுர மீட்டரில் 42 மீட்டர் உயரத்துக்கு கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
கருணாநிதியின் பொன் மொழிகள் நினைவு சின்ன பீடத்தில் பதிக்கப்பட உள்ளன. இந்த பேனா நினைவு சின்னம் கடலுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் முறையான அனுமதி பெறுவது அவசியமாகும். இந்த பேனா நினைவு சின்னம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
ஆதரவும், எதிர்ப்பும்
கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நிலுவையில் உள்ளது. மேலும் நாம் தமிழர் மற்றும் சில சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அமைப்புகள் தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கருத்து கேட்பு கூட்டம்
இது ஒருபுறம் இருக்க பேனா நினைவு சின்னம் அமைப்பது பற்றி தேசிய கடலோர மண்ட மேலாண்மை ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்ட தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதலில் பேனா நினைவு சின்னத்தின் கட்டுமானம் எப்படி இருக்கும், எந்தெந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து காணொலி வாயிலாக விரிவாக விளக்கப்பட்டது.
சீமான் கொதிப்பு
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதனால் இதனை கைவிட வேண்டும். மெரினாவில் புதைக்கவிட்டதே தவறு. தற்போது பேனா நினைவு சின்னமா?. இது அமைந்தால் நானே இடிப்பேன்'' என்று ஆக்ரோஷமாக பேசினார். இதனால் களபேரம் உண்டானது.
ஆம்ஆத்மி எதிர்ப்பு
இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி கருத்துகள் முன்வைக்கப்பட்டது. அதில், ‛‛முதலில் நினைவு மண்டபம் என்று கூறிவிட்டு, பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். இதிலேயே முரண்பாடு உள்ளது. கடற்கரைக்கும், நினைவு சின்னத்துக்கும் இடையேயான 350 மீட்டர் பாலம் வீணை வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள். தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லிவிட்டு கர்நாடக இசையை நினைவுப்படுத்தும் வீணை வடிவம் ஏன் அமைக்கப்படுகிறது?. தமிழ் ஆங்கிலத்தில் மட்டுமே நினைவு சின்னம் பற்றிய வர்ணணை என்பது போதுமானது. ஆனால் இந்தியையும் அதில் சேர்த்துள்ளார்கள். இது யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை என்று தெரியவில்லை. தமிழ் மொழிக்கான ஆட்சி எனக்கூறி இந்திக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?. இதேபோல் பாஜக தரப்பிலும் பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை உள்ள நிலையில் கருணாநிதி நினைவாக 137 அடியில் பேனா நினைவு சின்னமா?. திருவள்ளுவரை விட கருணாநிதி என்ன சிறந்தவரா? என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
மீனவ அமைப்பு-வணிக அமைப்பினர் ஆதரவு
மாறாக திமுகவின் ஆதரவு மீனவ அமைப்பினர், வணிக அமைப்பினர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பெருகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவாகும். வணிகம் பெருகும் என அவர்கள் பேனா நினைவு சின்னத்தை ஆதரிப்பதற்கான கருத்துகளை கூட்டத்தில் வெளிப்படுத்தினர்.