கலங்க வைத்த ‘அப்பா’.. கவுரவித்த நீயா நானா கோபிநாத்! பேச தெரியல.. படித்த தாய்க்கு ஆதரவாக கவிஞர் தாமரை
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட படிக்காத தந்தை ஒருவருக்கு கோபிநாத் பரிசு வழங்கி கவுரவித்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் கவிஞர் தாமரை படித்த தாய்க்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளார்.
விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
குறிப்பாக அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி, விளையாட்டு, சமூக ஊடகம் என பல்வேறு தலைப்புகளை கையில் எடுத்து காலத்துக்கு ஏற்ப நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் விவாதத்தை நடத்தி வருகிறார்.
மிச்சம் மீதி குழம்பை பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள் சார்! நீயா நானாவில் கலங்கிய வீட்டு பணிப்பெண்
படித்த அம்மா VS படிக்காத அப்பா
அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் படித்த அம்மா VS படிக்காத அப்பா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஒரு படிக்காத அப்பா தனது மகளின் பிராக்ரஸ் ரிப்போர்டை பார்த்து கையெழுத்திட விரும்புவதும், படித்த அம்மா அதற்கு முன்பாகவே கையெழுத்திடுவது பற்றியும் உரையாடியது பலரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நெட்டிசன்கள்
இதில் தனது கணவருக்கு படிக்கத்தெரியாது, பழமையானவர் என அந்த பெண் பேசியவுடன் கோபிநாத் நிகழ்ச்சிக்கு இடையிலேயே மகளை அழைத்து அப்பாவுக்கு பரிசு வழங்க சொல்லி கவுரவித்தது பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. கோபிநாத்தின் இந்த செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி கருத்திட்டு வருகின்றனர். அதே சமயம் அந்த பெண்ணையும் விமர்சித்து வருகிறார்கள்.
கவிஞர் தாமரை
இதுகுறித்து பேஸ்புக்கில் ஒருவரது பதிவுக்கு கீழே கவிஞர் தாமரை தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் (சொந்த அனுபவம்). படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் - வீட்டிலுள்ள அனைவரிடமும்!
குடும்பம் தலைநிமிரும்
அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்து, இன்னும் பல செய்துகள். கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும். உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும்.
பேசத் தெரியவில்லை
அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும். இந்தப் பெண்களெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து 'பிராக்ரஸ் ரிப்போர்ட்'டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்!" என்றார்.