கீழடியை உலகறிய செய்த ஹீரோ.. தமிழ்நாடு திரும்பிய அமர்நாத் ராமகிருஷ்ணன்.. திருப்பம்.. ஏன் முக்கியம்?
சென்னை: கீழடியில் தமிழர் வரலாற்றை மீட்டு எடுக்க காரணமாக இருந்தவரான மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சிகள் உச்சத்தில் இருந்த போது இடம்மாற்றம் செய்யப்பட்ட இவர் மீண்டும் தமிழ்நாடு திரும்பி உள்ளது கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு சாதகமான, முக்கியமான முடிவாக இந்த இடமாற்றம் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தொல்லியல் துறை ஆராய்ச்சிகள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு தீவிரமாக பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கீழடி நாகரீகம் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கார்பன் டேட்டிங் சோதனை உறுதி செய்யபட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகளை திராவிடர் நாகரீகம் என சொல்லாமல் தமிழர் நாகரீகமாக குறிப்பிட வலியுறுத்தல்!
இதன் காரணமாக சர்வதேச அளவில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. ரோம் பேரரசின் ஒரு பகுதியான எகிப்து மற்றும் ஓமன், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, நாடுகளில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு உள்ளது.
கீழடி
மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் கிமு 6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 2014ல் மத்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பெங்களூரில் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரின் திட்டத்தின் காரணமாக கீழடியில் ஆய்வுகள் செய்யப்பட்டது. இரண்டு கட்ட ஆய்வுகளை இங்கே செய்தவர் இவர்தான்.
ஆய்வு
கீழடியில் இவர் ஆய்வு செய்த போது கிமு 4ம் நூற்றாண்டுக்கு முந்தைய அணிகலன்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளில் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல் துறை சார்பாக அமர்நாத் ராமகிருஷ்ணன் இரண்டு கட்ட ஆய்வுகளை நடத்தி கீழடி நாகரீகத்தை உலகறிய செய்தார். உலகம் முழுக்க கீழடி குறித்த இதன் காரணமாகவே பேச்சுக்கள் எழத்தொடங்கின.
மாற்றம்
ஆனால் இவரை இந்த ஆய்வு குறித்து அறிக்கை கூட தயாரிக்க விடாமல் இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. 2016ல் இவர் திடீரென அசாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பொதுவாக எந்த தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டாலும், அந்த ஆய்வு நடத்திய தலைமை கண்காணிப்பாளர்தான் அறிக்கையை தயாரிக்க வேண்டும். ஆனால் இவரை அறிக்கை தயாரிக்க விடாமல் வேறு ஒருவரை வைத்து அறிக்கை தயார் செய்ய சொன்னது மத்திய அரசு. இதற்கு எதிராக வழக்கும் கூட அப்போது தொடங்கப்பட்டது. அசாமிற்கு மாற்றப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் சில மாதங்களில் மீண்டும் மாற்றல் செய்யப்பட்டு கோவாவில் பணியமர்த்தப்பட்டார். இதனால் கீழடி ஆய்வு முடங்கியது.
கீழடி ஆய்வு
இதன்பின் தமிழ்நாடு அரசு சார்பாக இங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. கீழடி குறித்து பல முக்கிய விவரங்களை அறிந்தவர் அமர்நாத்தான். இந்த நிலையில்தான் ஆச்சர்ய திருப்பமாக இவர் மீண்டும் தமிழ்நாடு வந்து இருக்கிறார். இந்த முறை தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழடி ஆய்விற்கும் நேரடி தொடர்புகள் இப்போது இல்லை என்றாலும் தமிழ்நாட்டிற்கு நேரடியாக பணிக்கு வந்து இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த உள்ளது.
முக்கியத்துவம்
அண்டை மாநிலங்களிலும் ஆய்வு நடத்த உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு தொல்லியல் ஆராய்ச்சிக்கு புதிய முகம் கொடுத்த நபர் மீண்டும் தமிழ்நாடு திரும்புவது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. கீழடி ஆய்வுகளில் இவர் உதவ வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுக்க என்ன உலகம் முழுக்க உள்ள தொல்லியல் அறிஞர்களிடம் அரசு ஆலோசனை பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில் தமிழ்நாடு திரும்பி இருக்கும் இவரிடமும் தமிழ்நாடு அரசு ஆலோசனைகளையே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.