பிரிக்க முடியாதது கேரளாவும் பேக்கரியும்.. கேரளா ஏன் பேக்கரிகளுக்கு பேமஸ் ஆனது? ஒரு சுவாரசிய வரலாறு!
சென்னை: நம் சிறுவயது முதல் இன்றளவும் பேக்கரிகள் நமக்குப் பிடித்தமான இடமாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் சிறு நகரங்களிலும் கேரளாவைச் சேர்ந்த சேட்டன்கள் பேக்கரிகளை வைத்திருக்கின்றனர். இங்கும் கேரள பேக்கரிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு உண்டு. கேரளாவில் பேக்கரிகள் எப்படி பேமஸ் ஆகின? கேரளாவில் பேக்கரி தொழில் தொடங்கியது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கேரளாவின் பேக்கரி வரலாறு 1852 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. ஐரோப்பிய வணிகர்கள் மூலம் கேரளாவுக்கு பேக்கரியின் அறிமுகம் ஏற்பட்டது. கேரளாவின் மிகப் பிரசித்தி பெற்ற பேக்கரியாகத் திகழ்ந்த 'ரொசாரியோ பேக்கரி' 1952ல் தொடங்கப்பட்டது. இந்த பேக்கரி தொடங்கப்பட்ட கதையே சுவாரஸ்யமானது.

கொச்சியின் மன்னர் வீர கேரள வர்மா, மேற்கத்திய வர்த்தகர்களான போர்ச்சுகீசிய, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் வணிகர்களை கவர்வதற்காக மேற்கத்திய பாணியில் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை சமைக்க, ரொட்டிகள் தயாரிக்கும் இக்னேஷியஸ் ரொசாரியோவை அணுகினார். அப்படித்தான் கேரளாவில் ரோசாரியோ பேக்கரி பிறந்தது.
1952 ஆம் ஆண்டுவாக்கில், ரொசாரியோ ஃபேமிலி பேக்கரி கோட்டயத்திற்கு தங்கள் பேக்கரிகளை விரிவுபடுத்தியது. மேலும் வரவேற்பு விருந்துகள் மற்றும் தேநீர் விருந்துகளை வழங்கும் ஒரு கேட்டரிங் தொழில் நிறுவனத்தையும் ரொசாரியோ ஃபேமிலி நடத்தியது. இவர்களின் மூலமாக கேரளா முழுவதும் பேக்கரி தொழில் விரிவடைந்தது. எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் சிற்றுண்டிகளுக்கு மாற்றாக பப்ஸ், கேக் போன்ற பொருட்கள் அனைவராலும் விரும்பப்பட்டன.
தலச்சேரியைச் சேர்ந்த மாம்பள்ளி பாபு குடும்பம், 1883ல் கேரளாவில் முதல் கிறிஸ்துமஸ் கேக்கை தயாரித்தது. அஞ்சரங்கண்டியில் இலவங்கப்பட்டை மரங்களை விளைவித்து வந்த முர்டோக் பிரவுனுக்காக இந்த கேக் செய்யப்பட்டது. பர்மாவில் பிஸ்கெட் தயாரிப்பில் அனுபவம் பெற்றிருந்த மாம்பள்ளி பாபு தலச்சேரிக்கு திரும்பி இருந்தார். பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிரவுன் இங்கிலாந்தில் இருந்து வாங்கிய கேக்குடன் மாம்பள்ளியின் பேக்கரிக்குள் நுழைந்தார். அங்கிருந்து அவர் வாங்கி வந்த கிறிஸ்துமஸ் கேக்கை பாபுவுக்கு டேஸ்ட் பார்க்கக் கொடுத்து அதுபோலவே மீண்டும் தயாரித்துக் கொடுக்குமாறு மாம்பள்ளி பாபுவிடம் கேட்டார்.
ஆனால், மாம்பள்ளி பாபுவுக்கு அதற்கு தேவையான பொருட்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை. பிரவுன், பாபுவை மாஹேயிலிருந்து பிராந்தி வாங்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு மாற்றாக முந்திரி, ஆப்பிள் மற்றும் கதளி பழம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு நாட்டுச் சாராயத்தை பயன்படுத்தினார் பாபு. ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் பிரவுன் கொடுத்த பழங்களைச் சேர்த்து ஒரு ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கேக்கை தயாரித்தார் மாம்பள்ளி பாபு. அதன் சுவை, பிரவுனுக்கு மிகவும் பிடித்துப்போகவே அதே சுவையில் தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக்குகளை செய்யத் தொடங்கினார் மாம்பள்ளி பாபு.
பின்னர், கேரளா முழுவதும் கிறிஸ்துமஸ் கேக்குகளும் பிரபலமாகின. பின்னர் 1960 களில் நவீன உணவுத் தொழில்கள் உலகம் முழுவதுமே பரவின. அந்த காலகட்டத்தில், கொச்சி பேக்கரி, சாந்தா பேக்கரி, மாடர்ன் பேக்கரி, பெஸ்ட் பேக்கரி, பிரவுனிஸ் மற்றும் கேஆர் பேக்ஸ் போன்ற ஏராளமான பேக்கரிகள் கேரளாவில் தோன்றின, அவற்றில் பல மாம்பள்ளி குடும்ப சந்ததியினரால் நிர்வகிக்கப்பட்டன. மற்றொரு முக்கியமான பேக்கரி செயின் கொச்சி பேக்கர்ஸ். கேரளாவின் பேக்கரிகள் நாடு முழுவதுமே பரவத் தொடங்கின.
1970களுக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கியதும் குழந்தைகளுக்கு வீட்டில் சுவையான நொறுக்குத் தீனிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, பேக்கரிகளில் வாங்கிக் கொடுத்தனர். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போய், அன்றாடம் செல்லும் இடங்களில் ஒன்றாக பேக்கரிகள் மாறிப்போனது.
இன்று வரை, கேரளாவில் பள்ளிக் குழந்தைகள் பள்ளி முடிந்ததும் சரி, கல்லூரி மாணவர்கள், வேலைகளுக்குச் செல்வோர் என ஏராளமானோர் மாலை வேளைகளில் முட்டை பஃப்ஸ், கேக் மற்றும் பேஸ்ட்ரிகளுக்காக பேக்கரிகளுக்கு வருகிறார்கள். 1971 க்குப் பிறகு சிறிய கஃபேக்கள் மற்றும் பேக்கரி கூல்ட்ரிங்ஸ் பார்கள் தோன்றியதன் மூலம் பேக்கரி கலாச்சாரம் மேலும் விரிவடைந்தது என்கிறார் பேக்கர்ஸ் அசோசியேஷன் கேரளாவின் அலுவலகப் பொறுப்பாளரும் மாம்பள்ளி குடும்பத்தின் நான்காவது தலைமுறை உறுப்பினருமான ரமேஷ்.
தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்களிலும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பேக்கரிகள் செயல்பட்டு வருகின்றன. பேக்கரி தொழிலில் கிட்டத்தட்ட 175 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டவர்களாக கேரளத்தவர்கள் இருக்கிறார்கள். கேரளத்தவரிடையே பேக்கரிக்கென ஏற்பட்ட கைமணம் இன்றும் தொடர்ந்து வருகிறது என்பதற்குச் சான்றாகவே இந்த கேரள பேக்கரிகள் திகழ்கின்றன.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications