இனி தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை.. TNPSCஇல் வரும் சூப்பர் மாற்றங்கள்..பிற மாநிலத்தவருக்கு செக்
சென்னை: டிஎன்பிஎஸ்சி-இன் அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ் மொழித்தாள் தேர்வைத் தனியாக நடத்தவும் அதில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வகையிலும் புதிய முறையை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநிலத்தில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகிறது
நான்கு க்ரூப் தேர்வுகள், துறை வாரியான தேர்வுகள், பதவி உயர்விற்கான தேர்வுகள் என ஆண்டுதோறும் 30க்கும் மேற்பட்ட தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும்.
TNPSC Job Alert: நல்ல சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு.. வாய்ப்பை தவறவிடாதீர்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு
பொதுவாகக் கடந்த காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டு வந்தன. சரி பாதி கேள்விகள் தமிழ் மொழியில் இருந்தே கேட்கப்படும் என்பதால், நன்கு தமிழில் தெரிந்தவர்கள் இதில் எளிதில் தேர்ச்சி பெற முடிந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பல முக்கிய மாற்றங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் பிற மாநிலத்தவர்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்யப்படுவதாகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மொழித்தேர்வு
அதாவது, வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வைத் தனியாக முதல் தேர்வாக நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பிரதான தேர்வுகளை எழுத முடியும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெறாதவர்கள் பிரதான தேர்வை எழுத முடியாது. இதற்கு ஏற்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு விதிகளிலும் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த முடிவு
டின்பிஎஸ்சி தேர்வுகளில் இந்த முறை மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், அது தமிழ் மொழியில் பயின்றவர்களுக்குப் பெரியளவில் உதவும் வகையில் இருக்கும். இதன் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவது தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னதாக, நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே டிஎன்பிஎஸ்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
மேலும், டின்பிஎஸ்சி பணியிடங்களில் 40% பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அரசாணை வெளியானவுடன் இதுவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவை தவிரப் போட்டித் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 75 நாட்களுக்குப் பின்னரே எழுத்துத் தேர்வு நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்வுகள் எப்போது
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி ஆலோசித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் க்ரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு படிப்படியாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வுகள் அனைத்தும் புதிய நடைமுறையைப் பின்பற்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.