டீ சாப்பிட கூப்பிட்டவர்கள் வீட்டுக்குப் போய் குஷ்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி - இனி குஷ்பு டீ பேமஸ்
டீ சாப்பிட்டு விட்டு போங்களேன் என்று அழைத்த வீட்டிற்குப் போய் பால் எடுத்து உரிமையோடு போட்டுக்கொடுத்துள்ளார் ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் குஷ்பு.
சென்னை: வாங்களே வந்து ஒரு கப் டீ சாப்பிடலாம் என்று அழைத்தவர்களின் வீட்டிற்கு போன குஷ்பு தானே பால், டீ தூள் சர்க்கரை கலந்து மணக்க மணக்க டீ போட்டு கொடுத்துள்ளார். குடிக்க ருசியாக இருந்த அந்த டீயில் குஷ்புவின் அன்புவும் கலந்திருந்ததாக ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக்கொள்கின்றனர்.
Recommended Video
சட்டசபைத் தேர்தலில் ஐந்து முனைப்போட்டி நிலவுவதால் பிரச்சார பாணியிலும் வேட்பாளர்கள் தனி பாணியை கடைபிடிக்கின்றனர். எனக்கு ஓட்டுப்போடுங்க என்று கேட்பதை விட வாக்காளர்களிடம் உரிமையோடு பழகி சின்னச் சின்ன வேலைகளை செய்து தொகுதி மக்களை கவர்ந்து வருகின்றனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
ஆரத்தியுடன் வரவேற்பு
நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது ஆயிரம் விளக்குத் தொகுதி. வேட்பாளரான குஷ்பு ஆயிரம் விளக்கு பகுதியில் தினந்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த தொகுதிக்கு குஷ்பு வாக்கு சேகரிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டாலே ஆரத்தி தட்டுடன் மக்கள் வரவேற்கின்றனர். பூமழை குஷ்புவின் மீது தூவப்படுகிறது.
அன்பென்ற மழையிலே
திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தாமரையை மலர வைத்தே தீருவேன் என தீவிர பிரசாரம் செய்து வருகிறார் குஷ்பு. தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து குஷ்புவை வாழ்த்தி வரவேற்காத இல்லத்தரசிகளே ஆயிரம் விளக்கு தொகுதியில் இல்லை எனும் அளவிற்கு பெண்களின் ஆதரவு குஷ்புவிற்கு அதிகரித்து வருகிறது. அனைவரின் அன்பு மழையும் நனைந்து கொண்டே பிரசாரம் செய்கிறார் குஷ்பு.
குஷ்புவிற்கு அழைப்பு
ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிக வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய முழு ஆதரவையும் குஷ்புவிற்கு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய குடும்பங்கள் பலவும் குஷ்புவை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து எங்க வீட்டுக்கு வாங்க என உரிமையுடன் அழைப்பு விடுத்து உபசரித்து வருகின்றனர்.
வாங்களேன் டீ சாப்பிடலாம்
குலாம் அபாஸ் அலிகான் 7வது தெருவில் வீடு, வீடாக சென்று குஷ்பு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது காதல் தம்பதியான முஸ்தபா, சலீன் ரீட்டா ஜோடி நடிகை குஷ்புவை தங்களுடைய வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டு செல்லும் படி அன்புடன் அழைத்தனர்.
டீ போட்ட குஷ்பு
அந்த அன்பான கோரிக்கையை மறுக்க விரும்பாத குஷ்புவும், அவர்களுடைய வீட்டிற்குள் நுழைத்தார். சலீன் ரீட்டாவிடம் சமையலறை எங்கு இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்ட குஷ்பு மடமடவென சமையல் அறைக்குள் நுழைந்தார். ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஹாலில் காத்திருக்க சொல்லிவிட்டு, விறுவிறுப்பாக டீ போட ஆரம்பித்தார் குஷ்பு.
டீ சப்ளை செய்த குஷ்பு
பால், டீத்தூள், சர்க்கரை ஆகியவை எங்கியிருக்கிறது என்பதை அவரே தேடி எடுத்து, ரசனையோடும் சிரித்த முகத்துடனும் குஷ்பு டீ போட்ட அழகை அந்த ஏரியா மக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சில நிமிடங்களிலேயே மணக்க மணக்க டீ போட்டு கொண்டு வந்து அவர் கையாலேயே அனைவருக்கும் கொடுத்தார்.
பெண்கள் ஓட்டு கன்பார்ம்
நான் உங்களில் ஒருத்தி என சொல்லுவதை விட வீட்டின் சமையலறை வரை சென்று நிரூபித்தார் குஷ்பு. அந்த டீயில் மணம், சுவை, திடம் மட்டுமல்ல குஷ்புவின் அன்பும், அக்கறையும் கலந்திருந்ததால் சுவை மடங்கு அதிகம் இருந்ததாக அந்த தொகுதி மக்களே பாராட்டினர். இப்போது ஆயிரம் விளக்கு தொகுதி பெண்கள் அத்தனை பேரின் மனங்களையும் கவர்ந்து விட்டார் குஷ்பு.
தாமரை மலருமா?
குஷ்பு பெயரில் இட்லி நாடு முழுவதும் பேமஸ் ஆனது. அதே போல குஷ்பு மினரல் வாட்டர் ஆயிரம் விளக்குத் தொகுதியில் பரவி வருகிறது. இனி குஷ்பு டீயும் பேமஸ் ஆகி விடும். இந்த வரவேற்பும் அன்பும் வாக்குகளாக மாறுமா? தாமரையை மலரை வைப்பாரா குஷ்பு மே 2ஆம் தேதி தெரியவரும்.