"வெற்றிமாறன்" எல்லாமே அவரவர் பார்வையை பொறுத்தது.. நான் சொல்றதுக்கு ஒன்றுமில்லை.. பாஜக குஷ்பு பதில்!
சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றி மாறன் பேசியது குறித்து நான் பேச விரும்பவில்லை என நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வம் படம் வெளியானாலும் ஆனது தற்போது ராஜராஜ சோழன் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசிய கருத்து தற்போது ஆதரவையும் விமர்சனங்களையும் ஒரு சேர குவித்து வருகிறது.
அந்த விழாவில் அவர் பேசியதாவது: கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த ஜெயலலிதா..! தமிழ்நாட்டு மம்தா குஷ்பு தான்! போட்டுத் தாக்கிய பேரரசு! என்ன காரணம் சொன்னார்?
வள்ளுவர்
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும் என்று பேசினார். இவரது கருத்திற்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராஜ ராஜ சோழன் இந்து இல்லாவிட்டால் அவர் ஏன் சிவன் கோயில்களை கட்ட வேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வெற்றிமாறன்
வெற்றி மாறனுக்கு ஆதரவாக கருணாஸும் எதிராக சக இயக்குநர் பேரரசுவும் கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் கூறியது குறித்து உங்கள் கருத்து என்ன என்பது குறித்து கேட்கப்பட்டது.
விருப்பமில்லை
அவர் கூறுகையில் ராஜ ராஜ சோழன் குறித்த கருத்துகள் ஒவ்வொருவருடைய பார்வையை பொறுத்தது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில் பொன்னியின் செல்வன் ஒரு பான் இந்தியா திரைப்படம். ஒரு தமிழராக இப்படியான ஒரு வரலாற்றை பதிவு செய்ததில் நமக்கு பெருமை.
படிச்சிட்டு குறை சொல்லுங்க
மணிரத்னம் ஒரு படம் எடுக்கிறார் என்றால் அவர் எதையும் ஆராயாமல் எடுத்திருக்க மாட்டார். எனவே முதலில் பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு பிறகு குற்றம் குறை சொல்லுங்கள். இவ்வாறு குஷ்பு தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலம், பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.