வேற லெவல்.. 2350 பேருந்து, ரயில் நிலையம், மேம்பாலம்! பொங்கலில் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ரெடி
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் 60 நாட்களில் முடிவடையும் எனவும், பொங்கலுக்குள் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரம் விரிவடைந்துகொண்டே செல்வதால் சென்னை மற்றும் புறநகரில் கூடுதல் பேருந்து நிலையங்களின் தேவை அதிகரித்து உள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகரில் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிட்டப்பட்டது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு என புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

82% பணிகள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 82 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

பொங்கலில் திறப்பு
வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் 60 நாட்களுக்குள் முடிவடையும். சுமார் 2350 பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையமாக இது அமைக்கப்பட்டு இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையம்
இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்கும். இதேபோல் பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு புதிய ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications