ஓபிஎஸ்-சின் தளபதி போல இருந்தாரே கோவை செல்வராஜ்.. அவருக்கு சப்போர்ட்டா என்னவெல்லாம் பேசினார் தெரியுமா
சென்னை: ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அவரது அணியில் இருந்து விலகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்து வந்த கோவை செல்வராஜின் அடுத்தக்கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை கடந்த ஜூன் மாதம் தீவிரம் அடைந்தது.
அதற்கு முன்பே இந்த விவகாரம் எழுந்தாலும் ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இந்த பிரச்சினை நேரடியாக வெளிச்சத்துக்கு வந்தது.

ஓபிஎஸ் வழக்கு
இதையடுத்து, ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக தீர்மானம் போடப்பட்டது. அதோடு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் கோவை செல்வராஜ்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தனி அணியாக செயல்பட தொடங்கியதில் இருந்தே இருவரது ஆதரவாளர்களும் ஒருவொருக்கொருவர் மாறி மாறி விமர்சித்து பேட்டி அளித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்திற்கு தீவிர ஆதரவாளராக இருந்தவர் கோவை செல்வராஜ். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுக்கும் போதெல்லாம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தவர்களின் முக்கியமானவராக கோவை செல்வராஜ் இருந்தார்.

ஜெயக்குமாரையும் விமர்சிப்பு
அதுபோக எடப்பாடி பழனிசாமியைக் கூட மிகக்கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கூட, வடைசட்டி தலையன் என்றெல்லாம் கூட கோவை செல்வராஜ் விமர்சித்து இருந்தார். இன்னும் சொல்லப்போனால், ஜெயக்குமார் ஒரு புரோக்கர், அவர் அதிமுகவே கிடையாது என்று பேசியிருக்கிறார்.

துரோகம் செய்ய பார்க்கிறார்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சுட்டிக்காட்டி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த கோவை செல்வராஜ், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூட குரல் கொடுத்தார். சமீபத்தில் கூட பிரதமருக்கே துரோகம் செய்ய பார்க்கிறார். ஜெயலலிதாவுக்கு கூட எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து இருப்பார் என்று கூட எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இவர் அளவுக்கு வேறு யாரும் இவ்வளவு தீவிரமாக எடப்பாடி பழனிசாமி தரப்பை விமர்சித்தது இல்லை என்று கூட சொல்லலாம்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்... தங்கள் சாதியை சேர்ந்தவர் தான் முதல்வராக முடியும்... என்று பேசியதற்கு கருத்து தெரிவித்து இருந்த கோவை செல்வராஜ், ஜாதி குறித்து பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் என்று பேசியிருந்தார். அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடுமையாக சாடியும் பேசி வந்த கோவை செல்வராஜ் திடீரென அவரது அணியில் இருந்து விலகியிருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மனசாட்சி இடம் கொடுக்கவில்லை
ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் சமீப நாட்களாக பெரிதாக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். ஓ பன்னீர் செல்வம் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் அவர் பதவி விலகியிருக்கலாம் என்றும் கூட அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. கோவை செல்வராஜ் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதையும் அதிமுகவினர் தீவிரமாக கவனித்து வருவதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications