கிருஷ்ண ஜெயந்தி..கண்ணன் செய்த லீலைகள்..கைப்பிடி அவல் கொடுத்தால் செல்வத்தை அள்ளித்தருவான்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் மக்களுக்கு கண்ணனுக்கு பிடித்தமான அவல், முறுக்கு, சீடை,அதிரசம் போன்றவைகளை படையல் இட்டு வழிபடுவார்கள். கிருஷ்ணருக்கு எத்தனையோ பலகாரங்களை படைத்தாலும் அவனுக்கு பிடித்த வெண்ணெயும் அவலும் படைத்து வழிபட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான். கேட்காமலேயே அனைத்தையும் அள்ளித்தருவான். கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கண்ணன் செய்த லீலைகளைப் பற்றி பார்க்கலாம்.
Recommended Video
பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. துவாபரா யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
அதர்மத்தை அழிக்க துவாபரா யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர்.
மக்களைக் காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம்.
கோகுலாஷ்டமி : கோகுலத்தில் கண்ணா கண்ணா... கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய நல்ல நேரம்
கண்ணனின் லீலைகள்
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கண்ணன் செய்த சில லீலைகளை பார்க்கலாம்.
சாப விமோசனம் கொடுத்த கண்ணன்
தாய்மாமன் கம்சன் கண்ணனை கொலை செய்ய துடித்தான். பிறந்த உடனேயே வாசுதேவரின் நண்பர் நந்தகோபரின் ஆயர்பாடிக்கு சென்று அங்கு யசோதையின் அரவணைப்பில் வளர்ந்த கண்ணன் எண்ணற்ற லீலைகளை செய்திருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடுவது. கோபியர்களுடன் உற்சாகமாக விளையாடுவது என சுற்றித்திருந்த கண்ணன் சில அரக்கர்களை வதம் செய்ததோடு சிலருக்கு சாப விமோசனமும் கொடுத்திருக்கிறான்.
குட்டிக்கண்ணனின் அருளாசி
கோகுலவாசிகள் கண்ணனின் குறும்புகளை ரசித்தாலும் யாசோதாவிடம் வந்து புகார் செய்தனர். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜூன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்தன அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.
சாபம் நீங்கிய தேவர்கள்
நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள். நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜூன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் சாப விமோசனம் பெற்று கண்ணனை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள். சாபம் நீங்கி மீண்டும் தேவர்களாக உருமாற்றம் அடைந்த இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து வணங்கி துதித்து மறைந்தனர்.
குசேலருடன் நட்பு
கோகுலத்தில் சிறுவயதில் எத்தனையோ லீலைகளை செய்தாலும் துவாரகை மன்னாக அரசாட்சி செய்த போது நடத்திய லீலை அற்புதமானது. நண்பர் குசேலரின் ஏழ்மையை போக்க அவர் கேட்டது ஒரு பிடி அவல்தான். அவருக்கு பிடித்தமான அவலும் வெண்ணெயும் கொடுத்து வணங்கினால் போதும் கேட்காமலேயே எண்ணற்ற செல்வங்களை தருவார் கிருஷ்ணன். கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும் குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர்.
அவல் படையல்
சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள். குசேலரும் துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார்.
என்ன கொண்டு வந்தீர்
ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசினர். அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது என்று நினைத்தார் குசேலர். கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் கேட்டார்.
அவல் சாப்பிட்ட கிருஷ்ணர்
குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையைப் பார்த்து, இது என்ன என்று கேட்டவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார். அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என நினைத்துக் கொண்டே குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார். தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
செல்வ செழிப்பு
வீடு திரும்பிய குசேலருக்கு அவரது வீடு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. செல்வ செழிப்போடு இருந்தது. தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். நட்புக்கு மரியாததை கொடுக்கும் பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த கதைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.