கராத்தே தியாகராஜன் சஸ்பென்ஷன்.. ப.சிதம்பரம் - கே.எஸ்.அழகிரி மோதல்?
சென்னை: காராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் மோதல் வெடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு எதிராக கராத்தே தியாக ராஜன் பேசியதால் கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தன்னை இடைநீக்கம் செய்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிதான் என்று தியாகராஜன் கூறினார். இதை முதலில் கே.எஸ் அழகிரி மறுத்தார்.
கராத்தே தியாகராஜன் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். கே.எஸ். அழகிரியும் ப.சிதம்பரத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அப்புறப்படுத்துவோம்
இந்த நிலையில் கே.எஸ். அழகிரி மீது கராத்தே தொடர்ந்து குற்றம் சாட்டியே வந்தார். இதை கே.எஸ். அழகிரி முதலில் மறுத்தாலும் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயரம், அதிகாரம், பொறுப்புகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் அதைத் தாண்டி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அந்த இயக்கம் அப்புறப்படுத்தவே செய்யும்.
கோஷ்டி மீது நம்பிக்கை இல்லை
எல்லோரும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, அவர்களிடம் கருத்து, மாற்றுக் கருத்து, எதிர் விமர்சனங்களை வைப்பது எனது தலைமையில் அது சாத்தியமில்லை. அப்படி யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் செய்வேன். எனக்கு எந்தக் குழுவின் மீதும் நம்பிக்கையும் கிடையாது. குழு மனப்பான்மையும் கிடையாது" என்று தெரிவித்தார்.
தவறில்லையே
சிவகங்கை தொகுதிக்கு நாசே ராமச்சந்திரனை வேட்பாளாராக அறிவிக்க பரிந்துரை செய்தீர்கள் என்று கராத்தே தியாகராஜன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கே.எஸ்.அழகிரி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, "எனக்கு அதற்கான உரிமை உண்டு. மாநிலத் தலைவர் என்கிற அடிப்படையில் அகில இந்திய தலைமை என்னிடம் கருத்து கேட்கிறது. நான் எனக்கு விருப்பமானவர்களின் பெயரைத் தெரிவிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லையே.
வாயை மூடிக் கொண்டா இருக்க முடியும்
அதற்குத்தானே என்னை தலைவராக நியமித்துள்ளனர். எதுவுமே சொல்லாமல் வாயை மூடிக்கொண்டா இருக்க முடியும். நான் பலருக்குப் பரிந்துரை செய்தேன். சிலருக்குக் கிடைத்தது, பலருக்குக் கிடைக்கவில்லை" என்றும் தெரிவித்தார். இதன் மூலம் சிவகங்கை தொகுதியை கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்க கூடாது என்று கே.எஸ்.அழகிரி வேலை செய்தது உறுதியாகியுள்ளது.
கார்த்திக்கு எதிராக
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. ப.சிதம்பரம் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பதால் சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
வெளிச்சத்திற்கு வந்த மோதல்
முன்னாள் மத்திய அமைச்சரும், சிவகங்கை தொகுதியை சேர்ந்தவருமான சுதர்சன நாச்சியப்பனும் கார்த்தி சிதம்பரத்துக்கு தொகுதியை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டு தன் மகனுக்கு சிவகங்கை தொகுதியை பெற்றுக் கொண்டு வந்தார் ப.சிதம்பரம். பின்னர் பேட்டியளித்த சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் ராகுல் போட்டியிடலாம் என்ற வாய்ப்ப்பு இருந்தது அதனாலேயே வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆனது. என்று கூறியிருந்தார். ஆனால் சிவகங்கை தொகுதி வேட்பாளர் தாமதத்திற்கு பின்னணி இப்போது தெரியவந்துள்ளது.
முட்டுக்கட்டை
யாருடைய பரிந்துரையால் கே.எஸ்.அழகிரி தமிழக தலைவர் பதவிக்கு வந்தாரோ அவரது மகனுக்கே அந்த தொகுதியை கொடுக்க கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்பதாலேயே அந்த தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆகியுள்ளது. இப்படியாக கே.எஸ்.அழகிரி - ப.சிதம்பரம் மோதல் பொது வெளிக்கு வந்திருக்கும் சூழலில் கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு கேட்டுள்ள ரூ. 15 ஆயிரம் கோடி நிவாரணத்தை முழுமையாக வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று ப.சிதம்பரமும், அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் அறிவித்துள்ளார்கள்.
இந்த போராட்ட அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரியாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ப.சிதம்பரம் கே.எஸ்.அழகிரி மோதல் முற்றியுள்ளது இன்னும் வெளிச்சமாகியுள்ளது.