புதுமைப்பெண் திட்டம் என்றால் என்ன.. அதன் நோக்கங்கள் என்ன.. விரிவான பார்வை!
சென்னை: புதுமைப்பெண் திட்டம் என்பது எதற்காக கொண்டுவரப்பட்டது.. அதன் நோக்கங்கள் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் திருமண உதவிக்காக திமுக ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்டது திருமண நிதி உதவி திட்டம்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, கடந்த 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தை கொண்டு வந்தார்.

தாலிக்கு தங்கம்
அதன்படி, மணப்பெண்ணின் கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 25 ஆயிரம், 50 ஆயிரம் நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. இதன்படி 4 கிராம், எட்டு கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில்
பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் என்ற பெயரில்
அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட இருக்கிறது.

மாதம் தோறும் ரூ 1,000
அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதில் பதிவு செய்திருந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதம் தோறும் ரூ 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று தமிழக அரசு தொடங்கி வைக்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications