நயினாரா இப்படி?.. டெல்லி வரை போன விவகாரம்.. தனித்து போட்டியிடுகிறதா பாஜக.. எகிறும் எதிர்பார்ப்பு
பாஜக தனித்து போட்டியிட போகிறதா என்று இன்று தெரிந்துவிடும்
சென்னை: நடக்க போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட போகிறதா? அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட போகிறதா? என்பது குறித்து இன்று அக்கட்சி எடுக்கப் போகும் முடிவில் தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அதேபோல அதிமுகவும் தனியாக ஆலோசிக்கிறது.. கூட்டணி, பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து அதிமுக மற்றும் பாஜக இன்று ஆலோசனைகளை நடத்துகின்றன.
ஆளுங்கட்சியை விமர்சித்து, குற்றஞ்சாட்டுவதற்கு பதிலாக கூட்டணி கட்சியையே சீண்டி உள்ளுக்குள்ளேயே புகைச்சலை அதிகரித்துவிட்டார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த பாஜக போராட்டத்தில் பேசிய நயினார், "பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது... அண்ணாமலை துணிச்சலாக கேள்வி எழுப்பி வருகிறார்... ஆனால், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை" என்று பேசியிருந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியா?.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
நயினார் நாகேந்திரன்
பாஜக கட்சியின் முக்கிய புள்ளியே இப்படி பேசியிருந்தது, அதிமுகவுக்கு எரிச்சலை கிளப்பியது.. நயினாரா இப்படி பேசியது என்று அதிர்ச்சியிலும் ஆழ்ந்தது.. இதுவரை அதிமுக மேலிடம் நாகேந்திரனின் பேச்சுக்கு எவ்வித கண்டனமும் வரவில்லை என்றாலும், நிர்வாகிகள் பலர் அவருக்கு எதிராக புகார் கொடுத்து வருகின்றனர்... ஒவ்வொரு முறை தேர்தலிலும், அதிமுகவின் தயவால் தான் பாஜக போட்டியிடுகிறது, கடந்த முறைகூட அதிமுகவால்தான் பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது...
சவால்
உண்மையிலேயே ஆண்மை இருந்தால் பாஜகவினர் தனித்து போட்டியிடட்டும்... நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் தனித்து போட்டியிட்டு முடிந்தால் சட்டசபைக்கு செல்லட்டும் என்று அதிமுகவினரே பலரும் சவால் விடுத்தனர்.. எனினும், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நயினார் விளக்கம் தந்திருந்தார்.. இதைதவிர நயினார் பேசியதற்கு அண்ணாமலையும் அதிமுக மேலிடத்திடம் மன்னிப்பு கோரியிருந்தார்.. ஆனால், விஷயம் டெல்லி வரை சென்றதாக கூறப்படுகிறது..
டெல்லி மேலிடம்
அதற்கு பிறகு நயினாரை டெல்லி மேலிடம் கண்டித்ததா? அழைத்து பேசியதா? இது தொடர்பாக விளக்கம் கேட்டதா? என்றெல்லாம் உறுதியாக எதுவும் தெரியவில்லை.. ஒருவழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தாலும், உண்மையிலேயே பாஜக தனித்து போட்டியிட போகிறதா? அல்லது மறுபடியும் அதிமுகவுடனேயே கூட்டணி வைத்து போட்டியிட போகிறதா என்பது தெரியவில்லை.. விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதுகுறித்த ஆலோசனையை இன்று பாஜக மேற்கொள்ளும் என்று தகவல்கள் கூறுகின்றன..
பாஜக வளர்ச்சி
அண்ணாமலை இங்கு பொறுப்பேற்றதில் இருந்து கட்சி ஓரளவு பலம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.. அதேசமயம், திமுகவுக்கு எதிரான கட்சியாக தன்னை முன்னிறுத்தி கொள்வதும் ஓரளவு பலன் தருவதாக சொல்லப்படுகிறது.. அதற்காக அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிடுமா என்பதும் சந்தேகமே.. எனினும் சமீப காலமாகவே, தனித்து போட்டியிடுவது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
இன்று முடிவு?
ஒருவேளை அதிமுகவுடன் இந்த முறை கூட்டணி வைத்தாலும், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளதாம்.. இதுவே தனித்து போட்டியிட்டால் ஓரளவு வாக்கு சதவிகிதம் கூடும் என்றும் பாஜக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. எதுவாக இருந்தாலும், இன்று கமலாலயத்தில் நடக்க போகும் கூட்டத்தில், அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்து விடும்.. பார்ப்போம்..!