தமிழகம் லாக்டவுன்: 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்- 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாமல் லாக்டவுன் வரும் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு லாக்டவுன்: இ பதிவு.. சலூன்கள்.. போக்குவரத்து.. இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம் மக்களே!
பேருந்துகள் இயக்கம்
இதர 27 மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் 50% இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்
இதேபோல் இந்த 4 மாவட்டங்களில் படப்பிடிப்புகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 100% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
கடை திறப்பு நேரம் நீட்டிப்பு
இதர 23 மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் மாலை 5 மணியில் இருந்து 7 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், திரையரங்குகள் தவிர பெரும்பாலான கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
அலுவலகங்கள் இயங்க தளர்வுகள்
மேலும் அரசின் அத்தியாவசியத் துறைகள், சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.